

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர் கள் மீது தடியடி நடத்திய போலீ ஸாரைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் தர்ணா போராட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:
அதிமுக தலைமை மாற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடி குறித்த விவா தங்கள், போட்டியாக மற்றொரு பிரிவினர் கட்சி தொடங்கும் சூழல் போன்ற பல பிரச்சினைகளை திசை திருப்பவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை அரசு அனுமதித் தது. ஆனால், அரசையே சட்டம் இயற்ற வைக்கும் வகையில் மாணவர்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது,
தேச, சமூக விரோத சக்தியாக காவல்துறை செயல்படுவதை மக்கள் உறுதி செய்துள்ளனர். வன் முறைச் சம்பவத்துக்கு அரசும், போலீஸாருமே பொறுப்பேற்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களி டம் போலீஸார் மீதான புகார் களைப் பெற்று வருகிறோம். உள் ளூர் போலீஸார் அவற்றை வாங்க மறுக்கிறார்கள். அதன்பிறகு நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடருவோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் நடந்த ‘தை புரட்சி’ என்றே மக்கள் நலக் கூட்டணி கருதுகிறது என்றார்.
போலீஸ் அதிகாரியின் ‘தோழர்’ விமர்சனம்
கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் ‘தோழர்’ என்ற சொல்லை விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து திருமாவளவன் கூறும்போது, ‘மதம், இனம், பாலினம், வயது, பொருளாதாரம் அனைத்தையும் தாண்டி உணர்வுரீதியாக சமத்துவம் ஏற்படுத்தும் சொல் ‘தோழர்’. இந்த சொல் ஆளும், அதிகார வர்க்கங்களை அச்சுறுத்துகிறது. ‘ஐயா’ என அழைப்பதையே விரும்புபவர்களிடம், தோழர் என்ற சொல்லை எதிர்பார்க்க முடியாது. காவல் ஆணையரும் வரும் காலத்தில் தோழர் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு, அந்த சொல்லை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.