

முன்னாள் அமைச்சர் துரை முருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வரும் 21-ம் தேதிக்கு நீதிபதி சிவகடாட்சம் தள்ளிவைத்தார். அதேசமயம், அன்றைய தினம் துரைமுருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகிய இருவரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது வீடு, சென்னையில் உள்ள ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள், ஏலகிரியில் உள்ள பண்ணை வீடு உள்ளிட்ட 11 இடங்களில் போலீஸார் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில் நடக்கிறது. நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.
அப்போது, துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.