இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதே குழந்தைகள் மரணத்துக்கு முக்கிய காரணம்: எம்.பி அன்புமணி குற்றச்சாட்டு

இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதே குழந்தைகள் மரணத்துக்கு முக்கிய காரணம்: எம்.பி அன்புமணி குற்றச்சாட்டு
Updated on
1 min read

பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து பலியாவதற்கு முக்கிய காரணம் இளைஞர்கள் மதுவின் பிடியில் சிக்கிக் கிடப்பதுதான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 13 சிசுக்கள் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வந்த நிலையில், இதுகுறித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எதுவும் வாய் திறக்காமலே இருந்தார்.

இந்நிலையில் நேற்று அன்புமணி ராமதாஸ் திடீரென தருமபுரி அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவை ஆய்வு செய்ய வந்திருந்தார். ஆய்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது: குழந்தைகள் தொடர் இறப்பு விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவமனை தரப்பில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதே நேரம் குழந்தைகள் பிரிவில் போதிய மருத்துவர்கள் இருந்தாலும் கூட, அதிக அளவில் சிகிச்சைக்கு குழந்தைகள் வருவதால், அவர்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே கூடுதல் மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை உடனே தமிழக அரசு நியமிக்க வேண்டும். 26 லட்சம் மக்கள் வசிக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டத்துக்கும் சேர்த்து ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான் உள்ளது. மத்திய அரசு 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநிலம் தோறும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை தருமபுரியில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மதுவின் பிடியில் சிக்கியுள்ளனர். மது பழக்கத்தால் இளைஞர்கள் தங்களுடைய கர்ப்பிணி மனைவியைக் கண்டுகொள்வதில்லை. பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிகள் தங்களுடைய உடல்நலம், கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் ஆகியவற்றை பராமரிக்க முடியாமல் போகிறது. ஊட்டச் சத்துக் குறைபாட்டால் கருவில் ஆரோக்கியமற்று வளரும் குழந்தைகள் இறுதியில் எடை குறைவாக அல்லது உடல்நல பாதிப்புடன் பிறந்து, மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும்கூட சில குழந்தைகள் இறந்துவிடுகின்றன. வெகு விரைவில் பெண்களைத் திரட்டி தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in