Published : 24 Feb 2014 12:00 AM
Last Updated : 24 Feb 2014 12:00 AM

நாளை சென்னை மாநகராட்சி அவசரக் கூட்டம்- கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற கூடுகிறது

சாலை உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றி, கவுன்சிலர்களின் ஒப்புதலை பெறுவதற்காக சென்னை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் நாளை (25-ம் தேதி) நடக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, 2014-15ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட், முன்கூட்டியே கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல மார்ச் மாதம் தாக்கலாக வேண்டிய சென்னை மாநகராட்சி பட்ஜெட்டும் முன் கூட்டியே கடந்த 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அம்மா திரையரங்கம், அம்மா குடிநீர், அம்மா வாரச் சந்தை உள்பட 132 புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன. அன்று மாலை பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. மேலும் மெரினா லூப் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றுதல், பெசன்ட் நகர், தி.நகர் பகுதிகளில் நடைபாதை அமைத்தல், சோழிங்கநல்லூர் மண்டலப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான 58 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலைப் பணிகள் உள்ளிட்ட மிக இன்றியமையாத அடிப்படைப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றி, கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக மாநகராட்சியின் அவசரக் கூட்டத்தை, நாளை (25-ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு நடத்த முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x