Published : 09 Dec 2013 10:01 PM
Last Updated : 09 Dec 2013 10:01 PM

புழல் சிறை வளாகத்தில் அங்காடி: ஜெயலலிதா திறந்து வைத்தார்

புழல் சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, சிறை அங்காடியை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய சிறை வளாகங்களிலும் ரூ.10 லட்சம் முதலீட்டில் சிறை அங்காடிகள் அமைக்கவும், அந்த அங்காடிகளில் சிறைவாசிகளால் சிறைச்சாலைகளில் தயார் செய்யப்படும் துணி வகைகள், ஆயத்த ஆடைகள், அடுமனைத் தயாரிப்புக்கள், காலணிகள், சோப்பு வகைகள், மெழுகுவர்த்தி, கொசு வலை, மழைக் கோட்டு, மசாலா பொடி வகைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்யவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, முதற் கட்டமாக, சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறை அங்காடியை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து திங்கள்கிழமை தொடங்கி வைத்து, 'பிரீடம்' என்ற பெயரில் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையைத் துவக்கி வைத்தார். இதன்மூலம், சிறைவாசிகள் பல்வேறு தொழில்களைக் கற்றுக் கொள்வதுடன் வேலைக்கேற்ற ஊதியமும் பெறுவர்.

மேலும், புழல் சிறை வளாகத்திற்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் 3,358 சதுர அடி பரப்பளவில் ரூ.66.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் காத்திருப்பு கூடம் மற்றும் சோதனை அறை, 200 காவலர்கள் தங்கும் வகையில் 5,713 சதுர அடி பரப்பளவில் ரூ.72.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவலர்கள் காத்திருப்பு கூடம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடை உடைப்பு கிராமத்தில் 97.4 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறந்த வெளிச் சிறைச்சாலையை திறந்து வைத்தார்.

புழல் மத்திய சிறை 1-ல் ரூ.45 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன அடுமனை, சிறைவாசிகள் தங்களது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வகையில் ரூ.1.63 கோடி செலவில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளி ஆகிய இடங்களில் 54 தொலைபேசி வசதிகளை துவக்கி வைத்தார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x