Published : 29 Nov 2013 10:43 AM
Last Updated : 29 Nov 2013 10:43 AM

விளையாட்டில் விளம்பரம் தேட வேண்டாம்: ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்பி, மாவட்டத்திற்கு ஓர் அரசு உடற்கல்வி மற்றும் விளையாட்டுக் கல்லூரியை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக சதுரங்க விளையாட்டுப் போட்டி, சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை சென்னையில் நடத்துவது முதலமைச்சருக்கு விளம்பரம் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்கள் உருவாக அது எந்த வகையிலும் உதவாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஒவ்வொரு முறை நான் ஆட்சிக்கு வரும்போதும் விளையாட்டுத்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறேன் என்றுவாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா கூறிவருகிறார். ஆனால், அவரது முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகளாலும், ஆசிரியர்கள் இன்றியும் சீரழிந்து வருவது ஏனோ அவருக்கு தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் கடந்த 2004 ஆம் ஆண்டில் அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. அப்போது இந்தியாவிலேயே உடற்கல்வி மற்றும் விளையாட்டிற்காக தொடங்கப்படும் முதல் பல்கலைக்கழகம் என முதலமைச்சர் பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால், தொடங்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டதைத் தவிர உருப்படியாக வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓய்வுபெற்று இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை புதிய துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. அதேபோல் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பதவிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. தொலைவழிக் கல்வி இயக்குனர் பதவி கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

அது மட்டும் அல்லாது, உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தின் மொத்தம் 6 துறைகள் உள்ள நிலையில், அவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தம் 22 ஆசிரியர்கள் மட்டும் இருக்கின்றனர். பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி ஒவ்வொரு துறையிலும் குறைந்தது 6 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு துறையை தவிர மற்ற 5 துறைகளில் நான்கிற்கும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால், பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளாகியும் இதுவரை பல்கலைக்கழக மானியக் குழுவின் மானியம் இன்று வரை கிடைக்கவில்லை என்பது வேதனையளிக்கும் உண்மையாகும்.

அதேநேரத்தில் முறைகேடுகளுக்கு மட்டும் குறைவில்லை. ஆசிரியர்கள் நியமனம், பதவி உயர்வு, ஒப்பந்தங்களை வழங்குதல் போன்றவற்றில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை விசாரணை நடத்தி முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோர் ஊழல் செய்ததை உறுதி செய்துள்ள போதிலும் இன்று வரை அவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

விளம்பரம் வேண்டாம்:

ஏற்கனவே பெருமளவில் ஊழல்கள் நடந்ததாலும், துணைவேந்தர் இல்லாததாலும் புதிய ஆசிரியர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், கல்விப் பணிகளோ, ஆராய்ச்சிப் பணிகளோ நடைபெறாமல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் முடங்கிக் கிடக்கிறது. அதேநேரத்தில், ஒருநாளுக்கு ஒரு லட்ச ரூபாய் வாடகையில் திரைப்பட படப்பிடிப்புகள் அனுமதிக்கப்பட்டு, ஒரு பல்கலைக்கழகம் படப்படிப்புத் தளமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ரூ.29 கோடி செலவில் உலக சதுரங்க விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவது, சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை நடத்த ஆண்டுக்கு ரூ. 2 கோடிகளை வாரி வழங்குவது போன்றவற்றால் முதலமைச்சருக்கு விளம்பரம் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்கள் உருவாக அது எந்த வகையிலும் உதவாது. விளையாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் தான் விளையாட்டு வீரர்களை வளர்த்தெடுக்க முடியும்.

எனவே, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்பி சீரமைக்கவும், மாவட்டத்திற்கு ஓர் அரசு உடற்கல்வி மற்றும் விளையாட்டுக் கல்லூரியை திறக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x