Published : 10 Jan 2014 09:27 AM
Last Updated : 10 Jan 2014 09:27 AM

5 பேர் நீக்கம்: அழகிரி இன்று அவசர ஆலோசனை

மதுரையில் தனது ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து, இன்று (வெள்ளிக்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக அவர் சென்னையிலிருந்து மதுரை செல்கிறார்.

கட்சித் தலைமை அறிவிப்புக்கு எதிராக அழகிரியின் ஆதரவாளர்கள் சுவரொட்டி ஒட்டிய பிரச்சினையால் 5 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:

‘இனியொரு விதி செய்வோம்’ என்ற தலைப்பில், பொதுக்குழுவில் அண்ணன் பங்கேற்பது போன்ற சுவரொட்டிகளை, ஆரப்பாளையத்தை சேர்ந்த கலை, இலக்கிய, பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் அன்பரசு இளங்கோவனும், கீரிப்பட்டி செந்திலும் ஏற்பாடு செய்தனர். இதற்கும் அண்ணனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அண்ணன் சென்னையிலிருந்தபோதுதான், இந்த சுவரொட்டிகள் மதுரையில் ஒட்டப்பட்டிருந்தன.

ஆனால், இதற்காக கட்சி அமைப்புகளைக் கலைத்திருக்க வேண்டாம். அதேநேரம் பொறுப்புக்குழுவில் எதிர்தரப்பினருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், இதுவரை நெருக்கடியான நேரங்களில் கட்சிக்கு உழைத்தவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அண்ணன் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக அவர் வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வருகிறார். வரும் 30-ம் தேதி பிறந்தநாள் வரை, மதுரையிலேயே அழகிரி இருப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x