Published : 01 Feb 2014 07:50 PM
Last Updated : 01 Feb 2014 07:50 PM

ஈரோடு: மானிய விலை தீவன விற்பனை விவசாயிகள் அமோக வரவேற்பு: பற்றாக்குறையால் விநியோகம் பாதிக்குமா?

ஈரோடு மாவட்டத்தில் அரசின் மானிய விலை கால்நடைத் தீவனம் வழங்கும் திட்டத்திற்கு விவசாயிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், தேவைக்கேற்ப தீவனம் வேளாண்மைத் துறை வசம் இல்லாததால், தேவைக்கேற்ப தீவன விநியோகம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதத்திலும், கால்நடைகளுக்கு தட்டுப்பாடு இன்றி தீவனம் வழங்கவும் மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டப்படி, மாவட்ட அளவில் குறிப்பிட்ட மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு உலர் வைக்கோல் தீவனம் கிலோ ஒன்று ரூ. 2 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

3.66 லட்சம் பசு, எருமை

ஈரோடு மாவட்டத்தில் 3.66 லட்சம் பசு மற்றும் எருமைகள் உள்ளன. பெருந்துறை, எழுமாத்தூர், பொலவக்காளிபாளையம், நம்பியூர், பவானி ஆகிய ஐந்து மையங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், மானிய விலையில் தீவனங்கள் வழங்கப்படுகிறது. மானிய விலையில் தீவனம் பெற விரும்பும் விவசாயிகள் அதற்காக பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பயனாளி அதிகபட்சமாக ஐந்து மாடுகளுக்கு தேவையான தீவனத்தை மானிய விலையில் பெற முடியும். இதன்படி, ஒரு வாரத்திற்கு, ஒரு மாட்டுக்கு 21 கிலோ தீவனம் என்ற அடிப்படையில், மாதம் 105 கிலோ வரை தீவனங்களை மானிய விலையில் அளிக்கலாம். வெளிச்சந்தையில் ஒரு கிலோ வைக்கோல் ரூ. 8 முதல் 12 வரை விலை வைத்து விற்கப்படும் நிலையில், அரசின் மானிய விலை தீவனத் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை, 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தீவனம் பெற பதிவு மேற்கொண்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தீவனப் பற்றாக்குறை

பதிவு மேற்கொண்ட விவசாயிகளுக்கு கடந்த 10ம் தேதி முதல் தீவனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வேளாண்மைத்துறையின் பண்ணைகளில் இருந்து தீவனங்களை பெற்று கால்நடை பராமரிப்புத்துறை வழங்கி வரும் நிலையில், ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, வைக்கோல் உபரியாக வைத்துள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து வைக்கோல் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மானிய விலை தீவனம் பெற தங்களது ரேஷன்கார்டு, புகைப்படத்துடன், கால்நடை மருத்துவரை அணுகி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கால்நடைகளை வளர்த்துவதற்கு சான்று பெற்றவர்களுக்கு, தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதனை வைத்துள்ளவர்களுக்கே தீவனம் வழங்கப்படுகிறது.

வெளியிடங்களில் கொள்முதல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐந்து மையங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் மொத்தம் 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு பண்ணைகளில் வைக்கோல் தட்டுப்பாடு இருப்பதால், வெளியிடங்களில் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதியன்று இதற்கான டெண்டர் திறக்கப்பட்டு, குறைந்த விலையில் தீவனம் வழங்க தயாராக உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கு விவசாயிகளிடம் வரவேற்பு இருக்கும் நிலையில், போதுமான தீவனத்தை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் நிதி ஒதுக்கீட்டை முழுமையாக செலவிடும் வரை விநியோகம் இருக்கும். குறைந்தபட்சம் இரண்டரை மாதம் வரை மலிவு விலை தீவனம் வழங்குவது தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x