Published : 12 Aug 2016 04:02 PM
Last Updated : 12 Aug 2016 04:02 PM

மினி லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி: கோயிலுக்கு சென்றபோது மணப்பாறை அருகே பரிதாபம்

மணப்பாறை அருகே மினி லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். காயமடைந்த 48 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே கோவில்பட்டி பகுதியில் மாகாளி முப்பிலியான் கோயில் உள்ளது. இங்கு கிடா வெட்டி வழிபாடு நடத்துவதற்காக, திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி அருகே உள்ள மலைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 70 பேர், சுமை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் மினி லாரி மூலம் நேற்று காலை ஊரில் இருந்து புறப்பட்டனர்.

அதே பகுதியில் உள்ள தம்புலி யாம்பட்டியைச் சேர்ந்த இளைய ராஜா என்பவர் லாரியை ஓட்டினார். வரங்குறிச்சி வழியாக வந்து, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ் சாலையில் பயணம் மேற்கொண்ட னர்.

அதேசமயம், மதுரையில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்றுகொண்டு இருந்தது. அதில், பயணிகள் யாரும் இல்லை. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த மாரியப்பன் பேருந்தை ஓட்டினார்.

வளநாடு கைகாட்டி அருகே உள்ள காரணிப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, ஆம்னி பேருந்து லாரியை முந்த முயற்சித்தது. அப்போது எதிர்பாராமல் லாரியின் பின் பகுதியில் பேருந்து மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து சில மீட்டர் தூரத்துக்கு, தரையோடு இழுத்துச் செல்லப்பட்டு, பக்கவாட் டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், மினி லாரியில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு, சாலையில் சிதறிக் கிடந்தனர். அவர்களில், ராஜூ மகன் ராம்குமார்(26), பொன்னன் மகன் ராஜூ(28), வெள்ளையன் மகன் பொன்னர்(10), ரத்தினம்(45), நல்லையா(49), வெள்ளிமலை மனைவி முருகாயி(45), மூக்கன் மனைவி சுப்பம்மாள்(37), பழனி யாண்டி மனைவி பொன்னம் மாள்(45) ஆகியோர் அதே இடத் தில் உயிரிழந்தனர். மேலும், படு காயங்களுடன் பலர் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வளநாடு போலீஸாரும், அந்த பகுதி மக்களும் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, திருச்சி சரக டிஐஜி அருண், எஸ்.பி செந்தில்குமார் உள்ளிட்டோரும் அங்கு சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.

ஓட்டுனர் கைது

திருச்சி, மணப்பாறை, துவரங் குறிச்சி, திண்டுக்கல் ஆகிய இடங் களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் மூலம் அனைவரும் திருச்சி, மணப் பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர் களில், கருப்பசாமி(60), அழகே சன்(65) ஆகியோர் சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்தனர்.

காயமடைந்தவர்களில் 11 பேருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையிலும், 17 பேருக்கு திருச்சி அரசு மருத்துவ மனையிலும், 16 பேருக்கு திருச்சி தனியார் மருத்துவமனையிலும், 4 பேருக்கு மணப்பாறை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் களில் சிலரது உடல்நிலை கவலைக்குரியதாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஆம்னி பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் வளநாடு போலீஸில் சரணடைந்தார். 304, 279, 337, 338 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விபத்தின் விசாரணை அதிகாரியாக மணப் பாறை டிஎஸ்பி கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு

விபத்து குறித்து திருச்சி மாவட்ட எஸ்பி செந்தில்குமார் கூறியதாவது: 10 பேரை பலி கொண்ட விபத்துக்கு முக்கிய காரணம், ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே என்பது தெரியவந்துள்ளது. ஆம்னி பேருந்து தங்களை நெருங்கி வருவதைப் பார்த்து, லாரியில் இருந்த மக்கள் கதறி கூச்சலிட்டுள்ளனர். அப்போதுகூட பேருந்து ஓட்டுநர், விபத்தைத் தவிர்க்க முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, வழக்கமாக விபத்துகளுக்கு பதிவு செய்யப்பட்டும் 304(ஏ) என்ற பிரிவின் கீழ் தற்போது இவ்வழக்கை பதிவு செய்யவில்லை. அதற்குப் பதிலாக, 304 (கொலைக் குற்றமாகாத மரணம் விளைவித்தல்) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜாமீன் கிடையாது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், நீதிமன்றத்தின் மூலம் கடும் தண்டனை கிடைக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x