Published : 25 Feb 2014 04:42 PM
Last Updated : 25 Feb 2014 04:42 PM

மதுரை: சிறைக்கைதிகள் தயாரித்த பொருள்களை வாங்க ஆர்வம்; `சுதந்திரம் மையத்தில் முதல் நாளில் ரூ. 6657-க்கு விற்பனை

மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் உற்பத்தி செய்த பொருள்களின் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில், ரூ. 6657 மதிப்பிலான பொருள்கள் விற்பனையாகின.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்தும் நோக்கில் ‘சுதந்திரம்’என்ற பெயரில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை மத்திய சிறை வளாகத்தில் இந்த விற்பனை மையத்தை திங்கள்கிழமை மதுரை சரக சிறைத்துறை டிஐஜி முகமது ஹனீபா திறந்து வைத்தார்.

அதில் காய்கறிகள், துணி வகைகள், ஊறுகாய், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருள்களும், பிரண்டை, செடி முருங்கை போன்றவற்றின் நாற்று வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இங்கு பொதுமக்கள் ஆர்வமுடன் பொருள்களை வாங்கிச் சென்றனர். முதல் நாளில் ரூ.6657 மதிப்பிலான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி கூறுகையில், ‘கைதிகள் உற்பத்தி பொருள்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில், 5 மணி நேரத்தில் ரூ.6657 மதிப்பு பொருள்கள் விற்கப்பட்டுள்ளன. லாபத்தில் 20 சதவீதம் பொருள் உற்பத்தி செய்த கைதிகள் குழுவுக்கு வழங்கப்படும்.

இப்பணியில் ஈடுபட்டுள்ள கைதிக்கு நாளொன்றுக்கு ரூ.100 வழங்கப்படும். இதன்மூலம், கைதிகளுக்கு வருவாய் கிடைக்கும். வரும் காலங்களில் கோழி, மீன் போன்றவற்றை விற்பனை செய்யும் அளவுக்கு இந்த மையம் விரிவுபடுத்தப்படும்’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x