Last Updated : 24 Jan, 2014 12:00 AM

 

Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

சிவாஜி சிலைக்கு சிறப்பான மாற்று இடம்- தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

சிவாஜி கணேசன் சிலையை சிறப்பான மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீப்பளித்த நீதிபதிகள், சிவாஜி கணேசனின் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு குறித்து நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து ஏதும் சொல்ல முடியாது. சிவாஜி சிலையை அமைப்பதற்கான மாற்று இடம் சிறப்பான இடமாக இருக்கவேண்டும் என்று மாநில அரசை கடிதம் மூலமாக கேட்டுள்ளோம். இதுகுறித்து சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு இருவரிடமும் ஆலோசித்து அவர்களும் ஒப்புக் கொண்டபடிதான் அக்கடிதத்தை அரசிடம் கொடுத்துள்ளோம்.

அரசு தரப்பில் எந்த இடம் கொடுக்கிறார்களோ, அந்த இடத்தில் சிலையை அமைக்கும் பணியை செய்வோம். மாற்று இடம் சிறப்பான இடமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த விஷயத்தை நடிகர் சங்கத்தின் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒட்டுமொத்த திரையுலகின் பிரச்சினையாகத்தான் பார்த்து வருகிறோம். அரசு கொடுக்கும் மாற்று இடத்தில் சிறப்பான விழாவினை ஏற்பாடு செய்து அங்கே சிவாஜி கணேசனின் உருவச்சிலையை எடுத்துச்சென்று அமைக்கும் வேலையை சினிமா குடும்பங்கள், ரசிகர்களுடன் இணைந்து செயல்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் கூறியிருப்பதாவது :-

தமிழகம் முழுக்க எத்தனையோ இடங்களில் சிலைகள் இருக் கின்றன. சென்னை அண்ணா சாலையும் போக்குவரத்து நிரம்பி வழியும் சாலைதான். அதில் பெரியார் சிலை தொடங்கி, எம்.ஜி.ஆர், முத்துராமலிங்க தேவர், ராமசாமி படையாச்சியார் சிலை வரைக்கும் அமைந்துள்ளது. அதெல்லாம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லையா. தற்போது நீதிமன்றம், சிவாஜி சிலை பொது இடத்தில் இருப்பதாக அப்சர் வேஷன் தெரிவித்துள்ளது. இதை உத்தரவு என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இப்போதும் அரசு தரப்பில் ஆலோசனை செய்து, அதன் இரு புற இடங்களை அகலப்படுத்தி சிலையை அகற்றாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்கலாம்.

அடுத்த தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கலைஞன் சிவாஜி. நிறுவிய ஒரு சிலையை அகற்றுவது சரியானதாக இல்லை. சினிமா சங்கங்கள் சார்பில் சிவாஜியை ரோல் மாடலாகவும், பிதாமகன்கள் என்றும் புகழ்ந்து பேசும் சினிமாத்துறையினர் பலரும் இதுகுறித்து வலியுறுத்த முன்வராமல் இருப்பது வருத்த மாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x