Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM

தி.மு.க.வுடன் சென்றால் தே.மு.தி.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்: தமிழருவி மணியன் கணிப்பு

"தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் தே.மு.தி.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்” என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழருவி மணியன் பேசியது:

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அணிகளுக்கு மாற்றாக வலிமையான அணிக்கான வாய்ப்பு கனிந்து தற்போது முழு வடிவம் பெற்றுள்ளது. மாற்று அணியில் பாரதிய ஜனதாவுடன் முதற்கட்டமாக ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இக்கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, இரு கொங்கு கட்சிகளும் இடம்பெறுகின்றன.

இனி தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் மட்டுமே வர வேண்டியுள்ளது. இக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாரதிய ஜனதா தமிழகப் பொறுப்பாளர் முரளீதரராவ் வருகிறார். வண்டலூரில் பிப்.8ம் தேதி நரேந்திர மோடி பேசும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

தி.மு.க.வுடன் சென்றால் தே.மு.தி.க.வின் எதிர்காலம் கேள்விக் குறியாகும். அது விஜயகாந்திற்கு தெரியாதா என்ன?. அதனால், அவர் வரும் 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நல்ல முடிவை அறிவிப்பார்.

பாரதிய ஜனதாவை வகுப்பு வாத கட்சி எனக் கூறுவது சொத்தைக் காரணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x