Published : 17 Jan 2014 01:11 PM
Last Updated : 17 Jan 2014 01:11 PM

தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி கர்ணன் மோதல் வலுக்கிறது: எஸ்.சி., எஸ்.டி. கமிஷனில் புகார்

நீதிபதி கர்ணனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அகர்வால் புகார் அனுப்பியுள்ளார். தலைமை நீதிபதிக்கு எதிராக நீதிபதி கர்ணன் கடந்த 6-ம் தேதி எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

சென்னை உயர் நீதி மன்றத்துக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு 12 பேர் கொண்ட பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்தது. இந்தப் பட்டியலை திரும்பப் பெறக் கோரி மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு சமீபத்தில் நடந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கர்ணன் திடீரென உள்ளே நுழைந்து, ‘புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள பட்டியல் நியாயமற்றது. இந்த பரிந்துரைப் பட்டியலை எதிர்த்து நானும் ஒரு மனுவை தாக்கல் செய்ய விரும்புகிறேன்’ என்றார். அதற்கு ‘மனுவைத் தாக்கல் செய்யுங்கள்’ என்று நீதிபதி தனபாலன் அவரிடம் கூறினார். அதையடுத்து நீதிபதி கர்ணன் அங்கிருந்து வெளியேறினார்.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது, அதே நீதிமன்றத்தைச் சேர்ந்த சக நீதிபதி ஒருவர் நீதிபதிகள் முன் சென்று தானும் அதே விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்ய விரும்புவதாகக் கூறியது நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது. நீதித்துறை வட்டாரங்களிலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீதிபதி கர்ணனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "கடந்த 8-ம் தேதி நான் எனது அறையில் நிர்வாகப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் வேகமாக வந்து என்னை அவதூறாகப் பேசியதுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டினார். என்னால்தான் வழக்கறிஞர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு நான் அமைதியாகத்தான் இருந்தேன். தனக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை மாற்றாவிட்டால் மீண்டும் வருவேன் என்றும் அச்சுறுத்தினார். குறிப்பிட்ட துறை வழக்குகளை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறினார். ‘மார்ச் 1-ம் தேதி துறைகள் மாற்றப்படும்போது அதுகுறித்து பரிசீலிக்கப்படும்’ என்று நான் கூறினேன். ஆனால், அவரோ உடனே மாற்றியாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் சேர்ந்த நாளில் இருந்து இதுவரை நீதிபதி கர்ணனைப் பற்றி சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர் என்னிடம் புகார் கொடுத்துள்ளனர். அவரது நடத்தை, தலைமை நீதிபதியின் மாண்பைக் குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை கூறி, நீதிபதி கர்ணன், டெல்லியில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு புகார் கடிதம் ஒன்றை கடந்த 6-ம் தேதி அனுப்பியுள்ளார். அதன் நகல், நீதிபதி கர்ணனின் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக் கிழமை விநியோகிக்கப்பட்டது.

அதில், “கரூர் மாவட்டம் குளித்தலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைவதற்கு நான் முயற்சி மேற்கொண்டேன். ஆனால், அது திறக்கப்படும் போது அங்கு எனக்கு பதிலாக மாலா என்னும் நீதிபதி நியமனம் செய்யப்பட்டு அவரால் அக்கட்டிடம் திறக்கப்பட்டது. இது எனக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x