Published : 25 Jun 2017 02:11 PM
Last Updated : 25 Jun 2017 02:11 PM
சென்னையில் கடந்த 6 மாதங்களில் 420 செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னையில் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து செயின் பறிப்பு கொள்ளையர்களை கைது செய்ய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் செயின் பறிப்பு திருடர்களை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “செயின் பறிப்பு திருடர்களை கைது செய்கிறோம். ஆனால், செயின் பறிப்பை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இந்த ஆண்டு இதுவரை சுமார் 420 செயின் பறிப்புகள் மற்றும் செல்போன் பறிப்புகள் நடந்துள்ளன” என்றார்.
இதில் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை பறிக்கும் நிகழ்வுகளும் அதிக அளவில் நடக்கின்றன. தனியாக நடந்து செல்லும் வயது முதிர்ந்த பெண்களை நோட்டம் விடும் டிப்டாப் உடை அணிந்த இளைஞர்கள், அவர்களிடம் மிகவும் அக்கறையாக பேசி நகைகளை பாதுகாப்பாக பொட்டலம் கட்டித் தருவதாக கூறி வாங்கிக் கொண்டு, நகைக்கு பதில் கற்களை பேப்பரில் மடித்து கொடுக்கும் சம்பவமும் அதிக அளவில் நடந்துள்ளன.
இதுகுறித்து மற்றொரு காவல் துறை அதிகாரி கூறும்போது, “முதியவர்களின் கவனத்தை திசை திருப்பி நகை திருட்டில் ஈரானிய திருடர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நகை திருட்டில் ஈடுபட்ட அடுத்த நிமிடமே வெளி மாநிலத்துக்கு சென்று விடுகின்றனர்.
இதனால், அவர்களை உடனடியாக கைது செய்ய முடியவில்லை. இருப்பினும் அவர்களில் பெரும்பாலானோரின் புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங் களுக்கும் அனுப்பி வைத்துள் ளோம். அனைத்து குற்றங்களும் முற்றிலும் தடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT