Published : 14 Jan 2017 09:08 AM
Last Updated : 14 Jan 2017 09:08 AM

ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது

தேர்வறையில் கைவிரல்ரேகை மூலம் வருகைப்பதிவு சரிபார்க்கப்படும்

ரயில்வே தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது. தேர்வறையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க விண்ணப்பதாரர்களின் கைவிரல் ரேகை மூலம் வருகைப்பதிவு சரிபார்க்க ரயில்வே தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக கருதப்படுகிறது ரயில்வே துறை. இத்துறையில் குரூப்-ஏ அதிகாரிகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். அதேபோல், குரூப்-பி அலுவலர்கள் குரூப்-சி பணியாளர்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலமாக பணிநியமனம் செய்யப்படுகிறார்கள். இதற்காக நாடு முழுவதும் 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் செயல்படுகின்றன. தெற்கு ரயில்வே பணியாளர்கள் சென்னை ரயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கூடத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும் சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து வருவது குறித்து ரயில்வே தேர்வு வாரியத்துக்கு அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், தேர்வுக்கூடத்தில் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் ரயில்வே தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் விரைவில் கட்டாயமாகிறது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே 12 இலக்க ஆதார் எண் அல்லது ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த 28 இலக்க ஆதார் பதிவெண்ணை குறிப்பிட வேண்டும். ஆதார் விவரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் முகவரி, கைவிரல் ரேகை, கண்ணின் கருவிழி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதன்படி, தேர்வெழுத வரும் விண்ணப்பதாரர்களின் வருகைப்பதிவு அவர்களின் கைவிரல்ரேகை மூலம் சரிபார்க்கப்படும். இதற்கு ஆதார் சர்வர் பயன்படுத்தப்படும். இதன்மூலம் எந்த விண்ணப்பதாரராவது ஆள்மாறாட்டம் செய்து தேர்வுக்கூடத்துக்கு வந்திருந்தால் அவர்கள் கையும்களவுமாக பிடிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் சுனிதா வேதாந்தம் “தி இந்து” விடம் கூறியதாவது:-

ரயில்வே தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாவிட்டால் ஆதாருக்கு விண்ணப்பித்தபோது அளிக்கப்பட்ட ஆதார் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் மூலமாக விண்ணப்பதாரர்களின் விவரங்களை ஆன்லைனிலேயே சரிபார்த்துவிடலாம். இது விண்ணப்பதாரர்களுக்கும் வசதி, ரயில்வே தேர்வு வாரியத்துக்கும் வசதி. அதேபோல், தேர்வுக்கூடத்தில் விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவுக்காக அவர்களின் கைவிரல்ரேகை பதிவுசெய்யப்பட்டு ஆதார் விவரங்களுன் ஒப்பிட்டுப்பார்க்கப்படும். இதன்மூலம் ஆள்மாறாட்டம் செய்வது முற்றிலுமாக தடுக்கப்படும். எனவே, ரயில் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை இல்லை என்றால் இப்போதை அதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆதார் எண் வரவில்லை என்றால்கூட ஆதார் பதிவு எண் இருந்தாலே போதும். இந்த புதிய நடைமுறை இனிவரவிருக்கும் ரயில்வே தேர்வுகளில் பின்பற்றப்படும்.

இவ்வாறு சுனிதா வேதாந்தம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x