Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

சென்னையில் மீன்கள் விலை உயர்வு

சென்னையின் மீன் தேவையை சென்னை மட்டுமல்லாமல், கடலூர், நாகப்பட்டினம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் மீன்கள் தான் நிவர்த்தி செய்கின்றன. அவ்வாறு, சென்னைக்கு வரும் மீன்களின் வரத்து தற்போது குறைந்துள்ளதால், மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை- சிந்தாதிரிப்பேட்டை மீன்சந்தை வியாபாரி தனலெட்சுமி தெரிவித்ததாவது:

நாள்தோறும் தலா 500 கிலோ மீன்கள் கொண்ட லாரிகள் 10 முதல், 15 வரை வரும். கடற்பகுதிகளில் மீன் இனப்பெருக்கம் குறைந்துள்ளதால், கடந்த ஒரு மாதமாகவே இங்கு வரும் மீன் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை நிறுத்தியதால், தற்போது சிந்தாதிரிப்பேட்டை சந்தைக்கு வரும் மீன் லாரி எண்ணிக்கை இரண்டு அல்லது ஒன்று என்ற ரீதியிலேயே இருக்கிறது.

இதனால், தற்போது சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில், கடந்த வாரம் சில்லறை விலையில் கிலோ 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்ற வஞ்சிரம் மீன், தற்போது 300 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையும், 250 ரூபாய்க்கு விற்ற இறால் மீன் 350 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்ற வவ்வால் மீன் 420 ரூபாய்க்கும் விற்கிறது.

அதே போல், கடந்த வாரம் கிலோ 80 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்ற சங்கரா மீன், தற்போது 130 ரூபாய் முதல், 150 ரூபாய் வரையும், 100 ரூபாய்க்கு விற்ற சுறா மீன் 150 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்ற சீலா மீன் 80 ரூபாய்க்கும் விற்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x