

ஆற்றங்கரையோர மக்களுக்கு சென்னை மாநகரத்திற்குள்ளேயே வசிப்பிடங்களை உருவாக்கி கொடுத்திடவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பகா இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு வீடுகளை ஒப்படைக்கும் ஆணையை நேரில் வழங்கியும், பத்தாயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
2005ஆம் ஆண்டு ஜவஹர்லால் தேசிய நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது அதிலிருந்துதான் பத்தாயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பல ஆண்டுகளாக அங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லையென்ற காரணத்தினாலும், தங்களுடைய தொழிலுக்காக சுமார் 30 கிலோமீட்டர் தூரம் தினந்தோறும் சென்றுவர வேண்டுமென்றும், அதனால் மிகுந்த சிரமம் ஏற்படுமென்றும், தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்று கூறி அந்த வீடுகளில் யாரும் குடியேற மறுத்து தற்போது வரை காலியாகவே இருந்து வந்தது.
மேலும், தற்போது பெய்த கனமழையால் ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில், பாதுகாப்பே இல்லாத இடத்திற்கு இடம்பெயரச் செய்வது நியாயம் தானா?
மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், மீனவர்கள், குடிசைவாழ் மக்கள் என பலதரப்பினருக்காக கட்டப்பட்ட வீடுகளை, தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டுவந்த நிவாரணப்பொருட்களில் அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி, அதை அதிமுக சார்பில் நிவாரணம் வழங்கியதைப் போன்று நாடகமாடினர்.
அதேபோல இந்த வீடுகளுக்கும் மழை வெள்ள பாதிப்புகளுக்காக கட்டப்பட்ட வீடுகள் என்ற ஸ்டிக்கரை ஒட்டி ஆளும் அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாங்கமென மீண்டும் நிரூபித்துள்ளது. எப்போதோ யாருக்கோ கட்டிய வீட்டை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளதென மக்களை ஏமாற்றுவதில் ஜெயலலிதாவிற்கு நிகர் ஜெயலலிதாதான்.
2011ல் தலைமை செயலாளரின் தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் அடங்கிய 23 பேர் கொண்ட உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படுமென அறிவித்தும், இதுவரையிலும் அதற்கான பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. தற்போது அந்த உயர்நிலைக்குழு செயல்பாட்டில் இருக்கிறதா, இல்லையா? என்பதுகூட தெரியாத நிலை உள்ளது.
கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை இடம்பெயரச்செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற அக்கறை காட்டும் அதிமுக அரசு, அதே ஆற்றங்கரையோரம் பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடங்களை மீட்பதில் ஏன் அக்கறை காட்டவில்லை?
ஆற்றங்கரையோர மக்கள் அனைவருமே கூலித் தொழிலாளர்களாகவும், நடைபாதை வியாபாரிகளாகவுமே உள்ளனர். எனவே சென்னை மாநகரத்திற்குள்ளேயே அவர்களுக்கு வசிப்பிடங்களை உருவாக்கி கொடுத்திடவேண்டும். அதை செய்யாமல் 30 கிலோமீட்டருக்கு அப்பால் வீடுகளை ஒதுக்கித்தந்தால், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மீண்டும் ஏற்கெனவே வசித்த அதே இடங்களிலேயே வசிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.