Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

கூட்டணி வியூகங்களை குழப்பிய பாமக பொதுக்குழு - மீண்டும் சாதி அரசியலுக்கு முக்கியத்துவம்

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் மதிமுக, பாமக, தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார். தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக அறிவித்துவிட்டார். அடுத்ததாக பாமக அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை சென்னையில் நடந் தது. இதில் கூட்டணி குறித்து முடிவெடுத்து அறிவிப் பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க.வையே விமர்சித்து கூட்டத்தில் பலரும் பேசினர்.

ராமதாஸ் பேசும்போது, ‘‘தமிழகத்தில் பா.ஜ.க. தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ.வுக்கு மேல் பெற்றதில்லை’’ என்றார். ‘‘மோடியைவிட சிறந்த ஆட்சியை அன்புமணி தலைமையில் பாமக தரும்’’ என்றார் குரு.

அதுமட்டுமின்றி, பா.ஜ.க. கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கும் வைகோவையும் ராமதாஸ் விமர்சித்தார். ‘‘கடந்த தேர்தலில் அதிக சீட்டுகள் கிடைக்கவில்லை என்பதால், கூட்டணியில் இருந்து வெளியேறியவர்தான் வைகோ’’ என்று குற்றம்சாட்டிய ராமதாஸ், தமிழகத்தில் பாமக மட்டுமே கொள்கை சார்ந்த கட்சி என்றார்.

தேமுதிகவை பட்டமரம் என்று பொதுக்குழுவில் கிண்டல் செய்தனர். ‘குடித்தால் என்ன தப்பு என கேட்கிறார்’ என விஜயகாந்தை அன்புமணியும் ராமதாஸும் விமர்சித்தனர். இப்படி பா.ஜ.க., மதிமுக, தேமுதிக என எல்லா கட்சிகளையும் விமர்சித்திருப்பதால் பா.ஜ.க. கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சமூக ஜனநாயகக் கூட்டணியை அமைத்துள்ளதாக பாமக அறிவித்து, அந்த அணி சார்பில் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

வியாழனன்று நடந்த பொதுக்குழுவிலும் 3 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, வட மாவட்டங்களில் பாமக தனித்துப் போட்டியிடுமா என்ற பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை முக்கிய விஷயமாக கையிலெடுக்கும் பாமக, இந்த முறை தர்மபுரி மற்றும் மரக்காணம் கலவரம், ராமதாஸ், அன்புமணி, குருவுக்கு எதிரான கைது நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வரும் தேர்தலில் பாமகவின் முக்கிய அஸ்திரமாக சாதி அரசியல் இருக்கும் என்பதையே இந்தப் பொதுக்குழு வெளிப்படையாகக் காட்டியுள்ளது.

அதை உறுதிப்படுத்துவதுபோல ‘சாதி அரசியல் செய்வதில் எந்தத் தவறுமில்லை’ என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

தர்மபுரி இளவரசன், திவ்யா காதல் விவகாரம், மாமல்லபுரம் இளைஞர் விழா தொடர்பான கலவரம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான பிரச்சினைகளை முன்வைத்து, வன்னியர்களின் வாக்குகளை மொத்தமாக அள்ள பாமக வியூகம் வகுத்து வருவது, பொதுக்குழுவில் பேசியவர்களின் வார்த்தைகளில் தெரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x