Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

மதுரையில் வைகோ-ரவிசங்கர்ஜி சந்திப்பு

வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ரவிசங்கர்ஜியை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ மதுரையில் சந்தித்துப் பேசினார். அப்போது பா.ஜ.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்திருந்த ரவிசங்கர்ஜி, பசுமலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். விருதுநகர் மாவட்டம், கலிங்கபட்டியில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, சனிக்கிழமை காலை மதுரை வந்தார். அப்போது பசுமலையில் உள்ள குன்றின் மீது இருக்கும் அந்த விடுதிக்குச் சென்ற வைகோ, அங்கிருந்த ரவிசங்கர்ஜியை காலை 9.30 மணிக்குச் சந்தித்தார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், ஈழத் தமிழர் நிலை பற்றியும், மத்தியில் காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க. தலைமையில் வலுவான அணியை ஏற்படுத்துவது பற்றியும் பேசியதாகத் தெரிகிறது. இந்தத் திட்டமிட்ட சந்திப்பு குறித்து மதுரை மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கே தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்தச் சந்திப்பு பற்றி ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வாழும் கலை அமைப்பு உலகில் 180 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த அமைப்பு நதிநீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், நோயுற்றுவர்களுக்கு சிகிச்சை அளித்தல், உடல் நலம் காக்க மூச்சுப் பயிற்சி கொடுத்தல், பழங்குடி மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகள் நடத்துதல் போன்ற மனிதநேய சேவைகளைச் செய்து வருகிறது. இதனுடைய தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜி, ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில், 2008 ஏப்ரலில் தெற்கு ஆசிய அமைதி மாநாட்டை நடத்தினார். அதில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்றனர். இலங்கையில் இருந்து புத்த பிட்சுகளும், அமைச்சர் ஆறுமுகத் தொண்டமானும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயலத் ஜெயவர்த்தனேயும் கலந்துகொண்டனர்.

தமிழர்களின் பிரதிநிதியாக வைகோ மட்டும் இதில் பங்கேற்றார். இதில் நார்வே அரசு அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக, டிச. 14-ம் தேதி, மதுரை பசுமலையில் தங்கியிருந்த பண்டிட் ரவிசங்கர் குருஜியை வைகோ காலை சந்தித்து, நாட்டு நிலைமைகள் குறித்தும், ஈழத் தமிழர்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x