

மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்பும் வகையில், தேவையற்ற மொழித்திணிப்பு வேலைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்திமொழியை எந்தெந்த வகையில் கூடுதலாக பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழு 2011ஆம் ஆண்டு பல்வேறு பரிந்துரைகளை தந்துள்ளது.
117 பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொள்வதாக குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். குடியரசு தலைவரின் ஒப்புதல் என்பது மத்திய அரசின் ஒப்புதலேயன்றி வேறல்ல. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்குவதன் முதற்படியாக சிபிஎஸ்இ மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்குவது, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்தி மூலம் பயில்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் இனி இந்தியில்தான் பேசவும் எழுதவும் வேண்டும்.
நாடாளுமன்றத்தில் இந்தி தெரிந்த மத்திய அமைச்சர்கள் இந்தியில் தான் பேசவேண்டும். மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்தி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
மத்திய அரசின் விளம்பரங்கள் பாதி அளவு இந்தியில்தான் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது மத்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலமும், இந்தியும் உள்ளன. அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்தி மட்டுமே மத்திய அரசின் அலுவல் மொழி என்பதை நோக்கி நகர்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானதாகும்.
எந்தவொரு மொழியையும் நிர்ப்பந்தமாக திணிப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும் என்பதை மத்திய அரசு மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். மோடி அரசின் இந்த நடவடிக்கை இன்னொரு மொழிப் போருக்கு வழிகோலுவதாகவே உள்ளது.
மனித குலத்தின் அறிவியல் பூர்வமான வளர்ச்சிக்கு தாய் மொழிக் கல்வி அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும்நிலையில், மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இந்தியை கட்டாயப்படுத்துவது தாய்மொழி வழிக் கல்வியை புறக்கணிக்கவே இட்டுச் செல்லும். கடந்த காலங்களில் இந்தியை பிற மொழி பேசும் மாநில மக்களிடம் திணிக்க முயன்றபோது மொழிப்போர் மூண்டது.
அத்தகைய சூழ்நிலையை மத்திய அரசு மீண்டும் ஏற்படுத்தக் கூடாது. மோடி அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சமஸ்கிருத மொழியை திணிக்க முயல்கிறது. மறுபுறத்தில் இந்தி மொழி திணிப்புக்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகிறது.
மக்கள் பிரச்சனைகளை திசைதிருப்பும் வகையில், தேவையற்ற மொழித்திணிப்பு வேலைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.