Last Updated : 01 Jun, 2017 07:59 AM

 

Published : 01 Jun 2017 07:59 AM
Last Updated : 01 Jun 2017 07:59 AM

ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர் புடைய ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான 6 நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்ய தமிழ் நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுத் துள்ளது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பரவியிருக்கும் சொத்துகளை எந்த வகையில் பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் திணறியது. பின்னர் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டபோது, தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி அந்த சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெய லலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்த மான 6 நிறுவனங்களின் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த உயரதிகாரி ஒருவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில், ‘‘முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டால், அதை மாவட்ட ஆட்சியர்களே பறிமுதல் செய்ய வேண்டும். அதற்கான அதிகாரத்தை இச்சட்டம் வழங்கி இருக்கிறது.

அதன்படியே சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடை முறைகள் முடுக்கி விடப்பட்டுள் ளன. நிலங்களை அடையாளம் காணும் பணிக்காக அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி வட்டாட்சியரை நியமிப்பார். பின்னர் அவர் மூலம் அந்த நிலத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என எழுதப்பட்ட பெயர்ப் பலகை வைக்கப்படும்’’ என்றார்.

பறிமுதல் செய்யப்படும் நிலங்கள் பொது ஏலத்தில் விடப்படுமா என்ற கேள்விக்கு அவர், ‘‘சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று தான் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே பறிமுதல் செய்யப்படும் நிலத்தை பயன்படுத்திக் கொள்வதா அல்லது பொது ஏலத்தில் விற்பதா என்பதை அரசுதான் முடிவு செய்யும். இந்த வகையில் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்’’ என்றார்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதா என்று கேட்ட போது, அவர், ‘‘இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் களுக்கு கடந்த மார்ச் மாதத்தின் 3-வது வாரத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் கடிதம் அனுப்பியிருந்தது. அதில் ஜூன் மாத இறுதிக்குள் சொத்து களை பறிமுதல் செய்யும் பணி களை முடித்து விட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்.

சிறப்பு அதிகாரி ஓய்வு

இதற்கிடையே லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்கு நரக சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி ஏ.எம்.எஸ்.குணசீலனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவ டைந்தது. இந்த சிறப்பு விசாரணை பிரிவு தான் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை கையாண்டு வந்தது. இதற்காக ஓய்வு பெற்ற ஐஜி குணசீலன் தலைமை யில் கடந்த 2013-ல் சிறப்பு விசாரணை பிரிவு அமைக்கப்பட்டது. ஓராண்டு வரையிலான இந்த பதவி காலத்தை அடுத்தடுத்து 3 ஆண்டுகள் வரை அரசு நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x