Published : 27 Nov 2014 08:47 AM
Last Updated : 27 Nov 2014 08:47 AM

கிரானைட் முறைகேடு தடயங்களை மறைக்க சதி: சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் குற்றச்சாட்டு

கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் குழு விசாரணையை தொடங்கவிருக்கும் நிலையில், மதுரை மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்ட குவாரிகள் தொடர்பான ஆவணங்களைத் திருத்த சதி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சகாயம் குழுவினருக்கு உதவுவ தற்காக ‘கனிம வள முறைகேடுகள் விசாரணை - சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்’ என்ற அமைப்பை சிலர் தொடங்கியுள்ளனர். இதன் மாநில தலைவர் சோமசுந்தரம்தான் மேற்கண்ட குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சோமசுந்தரம் கூறியதாவது:

தொடக்கத்தில் கிரானைட் முறைகேடுகளை நியாயமாக விசாரிப்பதுபோல் அரசு தரப்பில் காட்டிக் கொண்டனர். ஆனால், போகப்போக சமரசமாகிவிட்டனர். சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த 500-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது வழக்கு கூட பதிவு செய்யவில்லை. பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எழுபதுக் கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளுக்காக எங்களைப் போன்றவர்களை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுக்க வைத்தனர்.

இதுதவிர, போலீஸ் பதிவு செய்த பெரும்பாலான வழக்கு களில் பி.ஆர்.பி. நிறுவனங்களுக்கு நிலம் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்களையும் ஏஜென்ட்களை யும் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் பணியாளர்களையும் சாட்சிகளாக போட்டுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பிறழ்சாட்சிகளாக ஆகலாம். முறைகேடாக தோண்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை இதுவரை 3 முறை அளந்ததைத் தவிர கடந்த இரண்டரை ஆண்டு களில் வேறெந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட வில்லை.

அன்சுல் மிஸ்ரா ஆட்சியராக இருந்தபோது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிரானைட் கற்கள் இருந்ததாக கணக்கு சொன்னார். சுப்பிரமணியன் ஆட்சியராக வந்து அளந்தபோது அதில் 20 ஆயிரம் கற்கள் மாயமாகிவிட்டன. பி.ஆர்.பி. மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக மதுரை எஸ்.பி.யாக இருந்த பால கிருஷ்ணன், நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமே தாக்கல் செய்திருக்கிறார். நில உச்ச வரம்பு சட்டப்படி இவற்றை கையகப் படுத்தி, நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.

இந்நிலையில், தங்கள் மீது தொடரப்பட்ட 50 வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி பி.ஆர்.பி. தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த லட்சணத்தில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் தொடர் பான விசாரணைகள் 70 சதவீதம் முடிந்துவிட்டதாக அறிக்கை கொடுக்கிறார் முதல்வர்.

கடந்த 20 வருடங்களில் டாமின் அதிகாரிகள் உடந்தையுடன் பல ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாடுகளுக்கு வெட்டிக் கடத்தப்பட்ட கிரானைட் கற்கள் தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் இல்லை. இப்போது சகாயம் குழு விசாரணையிலும் உண்மைகளை மறைக்க சதி நடக்கிறது.

ஏற்கெனவே மேலூர் பகுதியில் முறைகேடாக செயல்பட்ட 42 கிரானைட் குவாரிகளை மீண்டும் மண்ணைப் போட்டு மூடி தடயம் இல்லாமல் செய்துவிட்டனர். அடுத்த கட்டமாக இப்போது, கிராமக் கணக்குகளில் நிலங்கள் தொடர் பான ஆவணங்களைத் திருத்த சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் துணையோடு சதி நடக்கிறது.

இவ்வாறு சோமசுந்தரம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x