Published : 09 Feb 2017 04:48 PM
Last Updated : 09 Feb 2017 04:48 PM

மனைவியைக் காணவில்லை: எம்.எல்.ஏ.வின் கணவர் ஆட்கொணர்வு மனு

தனது மனைவியைக் காணவில்லை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த திடீர் பேட்டியால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா நேற்று கூட்டியிருந்தார். இதில் பேசிய சசிகலா, "நம்மைப் பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. ஒற்றுமையுடன் இருப்போம்" என அறிவுறுத்தினார்.

வழக்கமாக கூட்டம் முடிந்து எம்எல்ஏக்கள் விடுதிக்கோ, தங்கள் வீடுகளுக்கோ செல்வார்கள். ஆனால், நேற்று கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏக்கள் யாரையும் அதிமுக தலைமை வெளியில் விடவில்லை. அமைச்சர்களை பொறுப்பாளர்களாக போட்டு, அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்படி செய்தனர். அதன்பின், மதிய உணவு முடித்து பிற்பகல் 3.20 மணிக்கு மூன்று சொகுசுப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், தனது மனைவியைக் காணவில்லை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 130-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் விளக்கத்தையடுத்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x