Published : 27 Sep 2013 04:08 PM
Last Updated : 27 Sep 2013 04:08 PM

தமிழகத்தில் 3,500 குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாகக் கட்ட முதல்வர் ஒப்புதல்

தமிழகத்தில் பழுதடைந்துள்ள 3,500 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலும் பழுதடைந்துள்ளதால், அதில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இங்கு குடியிருக்கும் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில், இக்குடியிருப்புகளை இடித்துவிட்டு, அங்கு புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக இந்த ஆண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் ரங்கநாதபுரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 480 குடியிருப்புகளை 38 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பார்த்தசாரதி நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 120 குடியிருப்புகளை 9 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பூர் பகுதியில், சத்தியவாணிமுத்து நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 392 குடியிருப்புகளை 31 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எழும்பூர் பகுதியில் நேரு பார்க் (பி.எச்.சாலை) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 288 குடியிருப்புகளை 23 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பிள்ளையார் கோயில் தெரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகளை 2 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

சேப்பாக்கம் பகுதியில் லாக் நகர் (நாவலர் நகர்) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 304 குடியிருப்புகளை 24 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அயோத்தியா குப்பம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 708 குடியிருப்புகளை 56 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோட்டூர்புரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 136 குடியிருப்புகளை 10 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மயிலாப்பூர் பகுதியில் ஆண்டிமான்யம் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 42 குடியிருப்புகளை 3 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பல்லக்குமான்யம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 48 குடியிருப்புகளை 3 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆடுதொட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 246 குடியிருப்புகளை 19 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

திருச்சி மாவட்டம், திருச்சி-பீச்சான்குளம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுளள 587 குடியிருப்புகளை 46 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகை கூடைமுடைவோர் காலனி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 117 குடியிருப்புகளை 9 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 3,500 குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளை 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு முதல்வர் நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x