Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

உடல்நிலை பாதித்த தந்தையைப் பார்க்க ஒரு மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் நளினி மனு- சிறைத் துறையினர் பதிலளிக்க உத்தரவு

வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஒரு மாதம் பரோலில் தன்னை விடு விக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தற்போது வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினி, தனது வழக்கறிஞர் பி.புகழேந்தி மூலம் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

‘ஓய்வுபெற்ற காவல் துறை ஆய்வாளரான எனது தந்தை பி.சங்கர நாராயணனுக்கு தற்போது 90 வயது ஆகிறது. நெல்லை மாவட்டம் அம்பலவாணபுரத்தில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வசித்து வரு கிறார். அவரை சந்தித்து 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தந்தையின் கடைசி காலத்தில் சில தினங்களாவது அருகில் இருந்து அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆகவே, ஒரு மாத காலம் சாதாரண விடுப்பில் என்னை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரி கடந்த டிசம்பரில் சிறைத் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளித்தேன். எனினும் எனக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை. எனது விண்ணப்பம் குறித்து உடனடியாக பரிசீலித்து எனக்கு விடுப்பு வழங்குமாறு சிறைத் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் நளினி கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. மற்றும் வேலூர் பெண்கள் சிறப்பு சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x