Published : 18 Jan 2017 11:16 AM
Last Updated : 18 Jan 2017 11:16 AM
ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து முதல்வர் ஓபிஎஸ் தலைமைச் செயலகத்தில் டிஜிபி ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவிலும் கொட்டும் பனியிலும் போராட்டத்தைத் தொடர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலையிலும் அந்தப் போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர்.
மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களிடம் கலைந்து போகச்சொல்லி போலீஸார் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீஸாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் தாசில்தார் சிவ ருத்ரய்யா தலைமையில் 4 அரசு அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தியும் பயனில்லை. முதல்வர் நேரில் வந்து பேச வேண்டும் எனக் கூறி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் ஆகியோர் மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
அதனால், தற்போது தலைமைச் செயலகத்தில் டிஜிபி ராஜேந்திரனுடன் முதல்வர் ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT