Published : 25 Nov 2013 02:15 PM
Last Updated : 25 Nov 2013 02:15 PM

இலங்கை சிறையிலிருந்து 15 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 15 பேரையும் விடுவித்து, ஊர்காவல்துறை நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) உத்தரவு பிறப்பித்தது.

கடந்த அக்டோபர் 14 அன்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம், கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் சர்வதேச நீர்ப் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 15 மீனவர்களையும் கைது செய்து அவர்களின் 4 படகுகளை கைப்பற்றியது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவல்துறை காவல்துறையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

நான்கு முறை காவல் நீட்டிக்கப்பட்டு இன்று புதுக்கோட்டை மீனவர்கள் மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை விசாரித்த நீதிபதி மகேந்திர ராஜா மீனவர்களை விடுதலை செய்தும், விசைப்படகுகள் சார்ந்த விசாரணையை டிசம்பர் 16 அன்று நீட்டித்தும் உத்திரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x