Published : 07 Sep 2016 09:32 AM
Last Updated : 07 Sep 2016 09:32 AM

தருமபுரியில் போலி வங்கி நடத்திய 4 பேர் கைது

தருமபுரியில் போலி வங்கி நடத்திய 4 பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

மும்பையை தலைமை இடமாகக் கொண்டுள்ள ‘யெஸ் பேங்க்’ நாடு முழுவதும் கிளைகளு டன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பெயருடன் கூடுதல் எழுத்துக் களைச் சேர்த்து ‘யெஸ் ஏபிஎஸ் பேங்க்’ என்ற பெயருடன் தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் அரசு கலைக் கல்லூரிக்கு எதிரில் புதிய வங்கி ஒன்று செயல்பட்டு வந்தது.

இதுகுறித்து, சேலத்தில் செயல் படும் ‘யெஸ்’ வங்கியின் கிளை மேலாளார் சசிகுமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் தருமபுரியில் செயல்படும் வங்கியில் நேரடியாக ஆய்வு செய்தபோது அது போலி வங்கி என தெரியவந்தது. இது பற்றி தங்கள் தலைமை அலுவல கத்துக்கு தகவல் அளித்த சசிகுமார், அவர்களின் வழிகாட்டுதல்படி தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி குற்றப்பிரிவு போலீ ஸாருக்கு உத்தரவிட்டார்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அது போலி வங்கி என தெரியவந்தது. எனவே வங்கி நடத்திய தருமபுரி மாவட் டம் ஏரியூரைச் சேர்ந்த சோம சுந்தரம்(31), தருமபுரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(24), நாமக்கல்லைச் சேர்ந்த சுந்தரேசன்(22), தருமபுரி இலக்கி யம்பட்டியில் அச்சகம் நடத்தும் முருகேசன்(48) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு போலீஸார் தெரிவித்ததாவது:

சோமசுந்தரம் ‘யெஸ் பேங்க்’ல் பணிக்காக தேர்வாகி சில பயிற்சிகளைப் பெற்றுள்ளார். பின்னர் அந்த பணிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் இணைந்து தனியாக வங்கி நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி தருமபுரி அரசு கலைக் கல்லூரி எதிரில் வாடகைக் கட்டிடத்தில் 2 மாதங்களுக்கு முன்பு ‘யெஸ் ஏபிஎஸ் பேங்க்’ என்ற பெயரில் வங்கியைத் தொடங்கி வாடிக்கையாளர்களிடம் முதலீடுகளை பெறத் தொடங்கியுள்ளனர். இந்த வகையில் 83 வாடிக்கை யாளர்களிடம் இருந்து இதுவரை ரூ.1.53 லட்சம் முதலீடுகளைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் உண்மையான ‘யெஸ் பேங்க்’ தரப்பினருக்கு தகவல் சென்றதால் புகார் அளிக்கப்பட்டு 4 பேர் கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள நாமக் கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய பிரபுவை தேடி வருகிறோம். இவர்களில், சோமசுந்தரம் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். அதேபோல, பாலாஜி இன்ஜினீயரிங் முடித்துள் ளார். தவறான வழியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்து தற் போது கைதாகியுள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x