Published : 12 Apr 2016 03:56 PM
Last Updated : 12 Apr 2016 03:56 PM

ஜெயலலிதாவின் விருத்தாசலம் கூட்டத்தில் இருவர் பலியான சம்பவம்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெயிலில் மயங்கிய 2 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி: விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து பல இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த காரணத்தால், வெளியேற முயன்ற போது காவல் துறையினர் அவர்களை வெளியே விட மறுத்ததால், நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள்.மேலும் 17 பேர் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

விரிவான செய்திக்கு: >விருதாச்சலம் சம்பவம்: காவல்துறைக்கு கருணாநிதி கண்டனம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கடும் கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காலை முதல் மாலை வரை வெட்டவெளியில், இருக்கும்படி செய்ததால் பெண்களும், வயதானவர்களும் மட்டுமல்லாமல் இளைஞர்களும் சுருண்டு விழுந்தனர். தான் மட்டும் குளு, குளு ஏசியில் இருந்துகொண்டு மக்களை வெயிலின் கொடுமைக்கு ஆளாக்கிய இந்த அதிமுக அரசை தேமுதிக சார்பில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விரிவான செய்திக்கு: >விருதாச்சலம் சம்பவம்: ஜெயலலிதா மீது விஜயகாந்த் சரமாரி குற்றச்சாட்டு

மதிமுக தலைவர் வைகோ: முதல்வர் கலந்து கொண்ட விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் சிலர் உயிர் இழக்கவும், பலர் உடல் நலிவுறவும் காரணமான சம்பவம் குறித்துத் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது

பாமக நிறுவனர் ராமதாஸ்: கடந்த மக்களவைத் தேர்தலின் போது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அந்த செய்தி ஜெயலலிதாவுக்கு தெரிந்தால் அபசகுனமாகி விடும் என்பதால், ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்து விட்டு புறப்படும் வரை அவருக்கு சிகிச்சை தராமல் தாமதித்தனர்.இதனால் அவர் உயிரிழந்தார்.

அதேபோன்ற நிகழ்வு தான் இப்போதும் அரங்கேறி இருவர் உயிரிழந்துள்ளனர். மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் ஜெயலலிதாவும், அவரது அரசும் எப்படி மதிக்கின்றனர் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணமாகும்.

விரிவான செய்திக்கு: >விருத்தாச்சலம் சம்பவம்: வைகோ, ராமதாஸ் கண்டனம்

முதல்வர் ஜெயலலிதா: விருத்தாச்சலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக தொண்டர்கள் இருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே இறந்ததாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க: >விருத்தாச்சலத்தில் இருவர் இறந்தது எப்படி?- முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெயிலில் மயங்கிய 2 பேர் உயிரிழந்தனர். > விரிவான செய்தி: >ஜெ. விருத்தாச்சலம் கூட்டம்: வெயிலில் மயங்கிய 2 பேர் பலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x