Published : 18 Jan 2014 12:41 PM
Last Updated : 18 Jan 2014 12:41 PM

தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வரும் 20-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருந்த தமிழக- இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ள இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவை இறுதி செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில், 20.1.2014 அன்று சென்னையில் நடைபெற இருந்த தமிழக – இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை 27.1.2014 அன்று நடத்திடலாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திக் குறிப்பின் முழு விபரம்:

தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் கச்சத்தீவையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது தான்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவச் சங்கங்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையினை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்றும், இதற்கு உரிய அனுமதியினை அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் இலங்கை மீனவர்கள் சார்பில் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டு ஜெயலலிதா பிரதமருக்கு 20.9.2013 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு தனது 23.12.2013 நாளிட்ட கடிதத்தில், இரு நாட்டு மீனவர்கள் கூட்டத்தை 2014, ஜனவரி, 20-ஆம் தேதி அன்று வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்து, அந்தக் கூட்டத்திற்கான இடம், நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள மீனவர் பிரதிநிதிப் பட்டியல், தமிழக அரசு சார்பாக பார்வையாளர்களாக கலந்து கொள்பவர்கள் பட்டியல் ஆகியவை தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் 10.1.2014 அன்று புதுதில்லியில் நடைபெற்றக் கூட்டத்தில், மீன்வளத் துறை செயலாளர் கலந்து கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் மீன்வளத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நாளான 20.1.2014ஐ உறுதி செய்ததுடன் இலங்கை நாட்டின் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ள மீனவர் பிரதிநிதிகளின் பட்டியல் மற்றும் மத்திய அரசு அலுவலர்களின் பட்டியல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

மேலும், இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை 13.1.2014 அன்று முதல் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும் என மத்திய அரசு தெரிவித்தது.

தமிழக சிறையிலுள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி தமிழக சிறையிலுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதுவரை 151 தமிழக மீனவர்களும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களும் இலங்கை சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியோரும் இன்னும் ஒரிரு நாட்களில் விடுதலை செய்யப்பட்டு விடுவர். அதேபோன்று, இதுவரை, தமிழக சிறையில் இருந்து 113 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரும்

இன்னும் ஒரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவர். இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள உள்ள மத்திய அரசு வெளியுறவுத்துறை அலுவலர்கள் குறித்த விவரப்பட்டியல் 17.1.2014 அன்று மத்திய அரசிடமிருந்து தமிழக அரசால் பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் அவர்களிடமிருந்து 17.1.2014 அன்று இரவு ஒரு கடிதம் நிகரி மூலம் பெறப்பட்டது. அதில் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் அவர்கள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு 17.1.2014 அன்று காலை தான் இலங்கைக்கு திரும்பி உள்ளதாகவும், அதனால் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ள இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவை இறுதி செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், எனவே 20.1.2014 அன்று சென்னையில் நடைபெறவிருந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்குமாறு இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை சிறைகளில் உள்ள மீதமுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு இலங்கை அரசு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்தக் கடிதத்தின் அடிப்படையில், 20.1.2014 அன்று சென்னையில் நடைபெற இருந்த தமிழக–இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை 27.1.2014 அன்று நடத்திடலாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தமிழக அரசு, மீனவப் பிரதிநிதிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையை 27.1.2014 அன்று சென்னையில் நடத்திடலாம் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x