Published : 16 Mar 2017 08:15 AM
Last Updated : 16 Mar 2017 08:15 AM
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிறகு மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி மற்றும் பெயர் ஆகியவற்றை திருத்த முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.கருணாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த 16.01.1992-ல் பிறந்தேன். ஆனால், எனது பெற்றோர் சட்டவிவரம் தெரியாமல் 19.01.1989-ல் பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும் போது தவறுதலாக குறிப்பிட்டுவிட்டனர். நான் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும்போது பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதியைக் குறிப்பிட்டிருந்தேன்.
அதன்பிறகு கடந்த 2010-ல் என்னுடைய பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பள்ளி மாற்றுச்சான்றிதழ்களில் என்னுடைய பிறந்த தேதியை 16.01.1992 என திருத்தக்கோரி உத்தரவு பெற்றேன். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழ் மற்றும் புதிய பள்ளி மாற்றுச்சான்றிதழ் பெற்றேன். இந்த ஆவணங்களின் அடிப்படையில் என்னுடைய பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பிறந்த தேதியை மாற்றித்தரும்படி தேர்வுத்துறை செயலரிடம் கடந்த 2014-ல் விண்ணப்பித்தேன். ஆனால் அவர் என்னுடைய மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்து தர மறுக்கிறார். எனவே என்னுடைய உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி ஆஜராகி வாதிட் டார். அதையடுத்து நீதிபதி பிறப் பித்த உத்தரவு விவரம் வருமாறு:
எஸ்எஸ்எல்சி விதிகள் பிரிவு 5-ன்படி, வயது மற்றும் பெயர்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் அந்த திருத்தத்தை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பே செய்திருக்க வேண்டும். தேர்வுக்கு பின்னர், திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என தெளிவாக உள்ளது.
எனவே மனுதாரரின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு தேர்வுத்துறை செய லாளருக்கு அதிகாரமே கிடையாது. ஆனால், மனுதாரர் தன்னுடைய பிறந்த தேதியை பெற்றோர் தவறுதலாக பள்ளியில் குறிப்பிட்டு விட்டனர் எனக்கூறி குற்றவியல் நீதிமன்றத்திலும் பிறந்த தேதியை மாற்ற உத்தரவு பெற்றுள்ளார். குற்றவியல் நீதிமன்றம் எந்த வொரு ஆவணத்தையும் பரி சீலிக்காமல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுபோன்ற அதிகாரமும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு கிடையாது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால் எதிர்காலத்தில் யார் வேண்டுமென்றாலும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பிறந்த தேதியை எளிதாக மாற்றிக்கொள்ள இயலும். எனவே இந்த மனுவை ஏற்க முடியாது. தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT