

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வங்கக்கடலில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது வடக்கு கடலோர ஆந்திரா முதல் கன்னியாகுமரி கடல் பகுதி வரை பரவியுள்ளது. அதிலும், தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளில் சற்று வலுவாக உள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். காலை 8.30 மணி நிலவரப்படி செங்குன்றத்தில் 2 செ.மீ., சோழவரத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.