Published : 24 Apr 2017 08:57 AM
Last Updated : 24 Apr 2017 08:57 AM

விஐடி பல்கலை. பி.டெக் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில், வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: விஐடி பல்கலைக்கழகத்தில் 2017-18ம் கல்வியாண்டில் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. துபாய், குவைத், மஸ்கட் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள 119 நகரங்களில் 167 தேர்வு மையங்களிலும் கணினி முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை, 2 லட்சத்து 23 ஆயிரத்து 81 மாணவர்கள் எழுதினர்.

நுழைவுத் தேர்வு முடிவு www.vit.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஆசிஸ் வைகர் முதலிடத்தைப் பிடித்தார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் திவ்யாணஸ் திரிபாதி 2-ம் இடத்தையும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திவ்யானசு மண்டோவாரா 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

விஐடி நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு மே 10-ம் தேதி முதல் தொடங்குகிறது.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வேலூர், சென்னை, போபால், அமராவதி ஆகிய இடங்களில் உள்ள விஐடி வளாகங்களில், ஏதேனும் ஒன்றில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

மாநில மற்றும் மத்திய கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள் விஐடியில் பி.டெக் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அவர் களுக்கு 4 ஆண்டுகளுக்கு 100 சதவீதம் படிப்பில் கட்டணச் சலுகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவருக்கும், ஒரு மாணவிக்கும் விஐடியில் 100 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும். மேலும், இலவச விடுதி மற்றும் உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x