

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 57 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதாலும், தாக்கப்படுவதாகும் அடையும் இன்னல்களை எடுத்துரைக்க தன்னிடம் வார்த்தைகள் இல்லை என வேதனை தெரிவித்திருக்கிறார்.
கடிதம் விபரம்:
தமிழக - இலங்கை மீனவர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது.
இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், மீனவர்களை காக்க மத்திய அரசுக்கு திறமை இல்லையோ என்ற சந்தேகத்தை மீனவர்கள் மனதில் ஏற்படுத்திவிடும்.
பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படுவது இலங்கை கடற்படை வேண்டும் என்றே இத்தகைய செயலில் ஈடுபடுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
மத்திய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் 11 படகுகளை மீட்கவும் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.