

அதிமுக பெயர், இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை, இணையதளம், ட்விட்டர் கணக்கையும் நாங்கள் இயக்கவில்லை என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக (அம்மா) கட்சியின் டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் இரண்டு அணிகளிடையில் ஏற்பட்ட மோதலை தீர்க்கும் வகையில், தேர்தல் ஆணையம் அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரு வேறு பெயர்கள், சின்னங்களில் இரு அணிகளும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், அதிமுகவின் இணையதளம், முகநூல், ட்விட்டர் கணக்குகளை தினகரன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக, தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு புகார் அளித்தது. இது தொடர்பாக, ஏப்ரல் 6-ம் தேதி காலைக்குள் விளக்கம் அளிக்க தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தினகரன் விளக்கத்தை அவரது வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளித்தனர். அதில், அதிமுக பெயர், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தவில்லை. இணையதளம், டுவிட்டர், முகநூல் பக்கங்களை நான் இயக்கவில்லை என தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.