Published : 06 Jan 2014 09:40 AM
Last Updated : 06 Jan 2014 09:40 AM

காணொலிக் காட்சி மூலமாகவே ஆட்சி: கருணாநிதி

சென்னை

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:

மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு, எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியது, தற்போது பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி விட்டது. இந்த விலை உயர்வைக் கண்டித்து அறிக்கை விடுவதற்கே கூச்சமாக இருக்கிறது. மத்தியிலே உள்ளவர்கள் இப்படி விலை உயர்த்துவதை, சாதனை போல செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் பால் விலையை உயர்த்தி விட்டதாக செய்தி வந்துள்ளது. பால் கொள்முதல் விலையைக் கடந்த வாரம் உயர்த்தி, முதலமைச்சர் அறிவித்தபோது, விற்பனை விலையை உயர்த்தப் போவதில்லை என அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்தது. ஆனால் ஒரு வாரத்திற்குள், தற்போது பால் விலை உயர்த்தப்பட்ட செய்தி வந்துள்ளது.

கொடநாட்டில் முதலமைச்சர் சென்று தங்கியிருப்பதால், அவரின் பாதுகாப்புக்காக வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள போலீஸார் கடும் குளிர் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. உடனடியாக மூத்த அதிகாரிகள் தேவையான வசதியைச் செய்து தரவேண்டும்.

முதலமைச்சரின் கொடநாடு புகைப்படங்களில் எல்லாம் தலைமைச் செயலாளரும் காட்சி தருகிறார் தலைநகரத்தில் முதல் அமைச்சரும் இல்லை, அமைச்சர்களும் இல்லை, தலைமைச் செயலாளரும் இல்லை. ஆட்சி, காணொலி காட்சி மூலமாகவே நடக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x