Published : 02 Feb 2017 09:35 AM
Last Updated : 02 Feb 2017 09:35 AM

ஜல்லிக்கட்டு வன்முறை விவகாரம்: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த 23-ம் தேதி போலீஸார் தடியடி நடத்தியதால், கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸார் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கும், வீடுகளுக்கும் போலீஸாரே தீ வைத்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோருக்கு ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்கு போலீஸார்தான் முக்கிய காரணம். எனவே அவர்களே இந்த சம்பவம் குறித்து விசாரித்தால் உண்மைகள் வெளியே வராது. எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். இக்குழுவில் சிபிஐ மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகியோரையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது கலவரத்தின்போது போலீஸார் தீ வைக்கும் வீடியோ காட்சிகள் ‘லேப்டாப்’ மூலமாக நீதிபதிகளிடம் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்த்த நீதிபதிகள், ‘‘தமிழக அரசு கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இதில் எப்படி உயர் நீதிமன்றம் தலையிட முடியும்’’ என கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ ஆதாரங்களை அந்த விசாரணை ஆணையம் முன்பாக தாக்கல் செய்யுமாறும் கூறினர்.

அதற்கு ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர், ‘‘கலவரத்துக்கு யார் காரணம்? என்பன உள்ளிட்டவை குறித்து விசாரிப்பதற்குத்தான் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. கலவரத்தில் படுகாயமடைந்தவர்கள் குறித்து விசாரிப்பதற்கு எதுவும் கூறப்படவில்லை’’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக கூறினர். அதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவை திரும்பப்பெறுவதாக கூறியதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x