Published : 13 Apr 2017 07:07 AM
Last Updated : 13 Apr 2017 07:07 AM

வருமான வரித்துறை அலுவலகத்தில் துணைவேந்தர் கீதாலட்சுமி நேரில் ஆஜர்: சரத்குமார், ராதிகாவிடம் அதிகாரிகள் விசாரணை

சமக தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

இடைத்தேர்தல் நடைபெற இருந்த ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் விநியோகம் செய்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் பெயரை தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் அதே தினத்தில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளி யாகின.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவல கத்தில் வைத்து கடந்த 10-ம் தேதி தீவிர விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா வுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை தேனாம்பேட்டை ஜெயம்மாள் தெரு, தி.நகர் பவுல் அப்பா சாமி தெரு ஆகிய இடங்களில் உள்ள ராடன் மீடியா அலுவலகத்தில் இந்த சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள ராடன் மீடியா அலுவலகத்துக்கு சரத்குமாரை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

ராடன் மீடியா அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் ஏராள மான ஆவணங்களை அதிகாரிகள் கைப் பற்றியுள்ளனர். அதில், சில வங்கிக் கணக்குகள் சரத்குமார் பெயரில் இருப்ப தாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருக்கும் தகவல்கள் குறித்து நேரில் விளக்கம் அளிக்கும்படி சரத்குமார், ராதிகா ஆகியோருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

அதன்படி, நேற்று மாலை 3 மணி யளவில் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் ஒரே காரில் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் இரவு 8.30 மணி வரை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

கீதாலட்சுமி ஆஜர்

விசாரணைக்கு ஆஜராகுமாறு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமிக்கும் வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல், வருமான வரித்துறையின் சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கீதாலட்சுமி வந்தார். அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு மாலை 6 மணிக்கு அவர் வெளியே வந்தார்.

அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், கீதா லட்சுமிக்கு ரூ.32 லட்சம் கொடுக்கப்பட்டி ருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கடந்த 7-ம் தேதி காலை 8 மணிக்கு அவரது வீட்டில் சோதனையை தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், மறுநாள் காலை 8 மணிக்கு தான் முடித்தனர். எனவே, பல முக்கியமான ஆவணங்களை அவரிடம் இருந்து அதிகாரிகள் கைப்பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது குறித்தும் கீதா லட்சுமியிடம் விசாரித்ததாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x