

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
அம்பேத்கரின் 70-வது நினைவு தினத்தையொட்டி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெக-வில் இணைந்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் அனைத்து கட்சிகளிலும் இருந்தார். நான் ஒரே ஒரு கட்சியில் இருக்கிறேன்.
எனது ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் ‘ஆப்சென்ட்’ எனக்கூறி 6,000 பேர், இறந்தவர்கள் எனக்கூறி 16,000 பேர் என மொத்தம் 22,000 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினேன்.
திண்டுக்கல்லில் தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை சேர்ப்பதற்கு பதிலாக, பெயர்களை நீக்கிவிட்டனர். நீக்கப்பட்டவர்கள் பெயரை சேர்ப்பதாக திண்டுக்கல் ஆட்சியர் கூறியிருக்கிறார். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
திண்டுக்கல்லில் உள்ள திமுக பிரமுகர் முருகானந்தம் என்பவரை இறந்தவர் பட்டியில் சேர்த்துள்ளனர். எஸ்ஐஆர் பணிக்காக எங்குமே செல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே விண்ணப்பங்களை நிரப்பி கணக்கு காட்ட தேர்தல் ஆணையத்துக்காக வேலை செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.