Last Updated : 10 Dec, 2013 12:00 AM

 

Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 10 Dec 2013 12:00 AM

பழமைவாய்ந்த கடலூர் செங்கோட்டையின் எதிர்காலம் என்ன?

பல வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட கடலூரில் காவல் துறையின் கம்பீரத்தை பறை சாற்றுவது 108 ஆண்டு கால பழமைவாய்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டிடமாகும். தமிழகத்திலேயே மிகப்பழமையான காவல்துறை கட்டிடம் இருப்பது கடலூரில் மட்டுமே. தற்போது ஆயுதப் படை போலீசாருக்குரிய அலுவலக வளாகமாக இருந்து வரும் பழமைவாய்ந்த இந்தக் கட்டிடத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

ஆங்கிலேயர் முதன்முதலில் தென்னிந்தியாவுக்குள் நுழைந்தது கடலூர் துறைமுகம் வழியாகத்தான். ஆங்கிலேயர் ஆட்சிசெய்த காலந்தொட்டு கடந்த 1993-ம் ஆண்டு வரை தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகராக விளங்கியதன் காரணமாக, ஆங்கிலேயர்கள் இந்த காவல்துறைக் கட்டிடத்தை 1905-ல் அமைத்தனர்.

மணலும், இரும்பும் பயன் படுத்தாமல் மரக்கட்டைகள், சுண்ணாம்பு, செங்கல் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி, செங்கல் வண்ணத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் முன் பீரங்கி குண்டு பயன்படுத்தும் துப்பாக்கிக் குழல் இன்றும் உள்ளது.

இக்கட்டிடம் 1950-லிருந்து எஸ்.பி. எனும் காவல்துறை கண்காணிப்பாளர் அதிகாரியின் தலைமையில் இயங்கியது. தென்னாற்காடு மாவட்டத்தின் முதல் எஸ்.பி-யான கோவிந்தன் நாயர் தொடங்கி 2011-ம் ஆண்டு அஸ்வின்கோட்னீஸ் வரை இக்கட்டிடத்தில் பலர் எஸ்.பி-யாக பணிபுரிந்துள்ளனர்.

2011-ல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு இடம் பெயர்ந்ததற்குப் பின்னர் இக்கட்டிடத்தில் மாவட்ட ஆயுதப் படை போலீசார் அலுவலகம் இயங்க ஆரம்பித்தது.

தமிழகத்தின் முதல் ஐ.ஜி ஆன எஃப்.வி.அருள் , தமிழக காவல்துறை டி.ஜி.பி-யாக பணியாற்றிய ஏ.எக்ஸ். அலெக்சாண்டர், டி.எஸ்.பஞ்சாப கேசன் ஆகியோரும் குறிப்பிடத் தக்கவர்கள், தற்போதைய ஏ.டி.ஜி.பி-யாக இருக்கும் ஜாங்கிட், சைலேந்திரபாபு, கோவை மண்டல ஐ.ஜி-யாக உள்ள டேவிட்சன் ஆகியோர் இக்கட்டிடத்தில் பணியாற்றி யுள்ளனர்

இத்தகைய பெருமக்கள் பணியாற்றிய பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள இக்கட்டிடத்தில்,தற்போது இயங்கிவரும் ஆயுதப்படை போலீசாரும் இடப்பற்றாக்குறை காரணமாக வேறு இடத்துக்கு மாற தயாராகிவருகின்றனர். அதன்பின் இக்கட்டிடம் பராமரிப்பின்றி போகும் அபாயம் இருப்பதாக காவலர்களும் கடலூரை நேசிப்பவர்களும் கவலை தெரிவித்தனர்.

100 ஆண்டுகளைக் கடந்து கம்பீரத்துடன் காட்சியளிக்கும் இக்கட்டிடத்தை அடுத்து என்னசெய்யப் போகிறீர்கள் என்பது குறித்து மாவட்ட எஸ்.பி-யான ராதிகாவிடம் கேட்டபோது, “கடலூரின் செங்கோட்டையாக விளங்கும் நூற்றாண்டுக் கட்டிடத்தின் சிறப்பையும், இங்கு பணியாற்றி தமிழக காவல்துறையில்

முத்திரை பதித்த அதிகாரிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையு ம் இக்கட்டித்தில் இடம்பெறச்செய்யும் திட்டம் வைத்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x