Published : 10 Feb 2014 05:16 PM
Last Updated : 10 Feb 2014 05:16 PM

ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களின் போராட்டம் தீவிரம்

தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கக்கோரி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து, கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழக விசைப்படகு மீனவர்கள் வாருதல் (trawling) எனப்படும் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி போன்ற என்ற மீன்பிடிமுறைகளை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றார்கள்.

இந்த மீன்பிடி முறையினால் ஏற்பட்ட விளைவுகள் மிகவும் அபாயகரமானவை. இந்த மீன்பிடி முறையினால் மீனவர்களுக்கு வேண்டிய மற்றும் வேண்டாத அனைத்து வகையான கடல் வாழ் உயிரினங்களும் இதில் பிடிபடுகின்றன.

இதனால், கடலுக்கடியில் இருக்கும் சூழல் மண்டலம் பாதிக்கப்படுகின்றது. பவளப்பாறைகள் சிதைக்கப்படுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால் காடுகளை மொட்டையடிப்பது போலத்தான். கடல் வளம் அழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் மீனவர்கள் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி முதலியவற்றை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும், விசைப்படகு மீனவர்கள் பலர் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி வருவதாக நாட்டுப் படகு மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோரை கண்டித்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி இரண்டாவது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடற்கரைகளில் ஆழிமில்லாப் பகுதிகளில் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து அடுத்தகட்டமாக மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இது குறித்து நாட்டுப் படகு மீனவர்கள் சங்கப் பிரநிநிதி ராயப்பன் கூறும்போது, "விசைப்படகு மீனவர்களில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடலில் மீன் வளம் பாதிக்கப்படுகின்றது. இதனால் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை இரண்டாவது நாளாக காலைவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றோம். மேலும் செவ்வாய்க்கிழமை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகம் எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

கடந்த ஜனவரி 27ல் சென்னையில் தமிழக-இலங்கை இரு நாட்டு மீனவர்களும் நடத்தியபேச்சுவார்த்தையின் முக்கியமான ஷரத்தே இரு நாட்டு மீனவர்களும் தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிக்கக்கூடாது என்பதுதான். விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிப்பதால்தான் பாக்சலசந்தி கடற்பரப்பு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்வளம் அழிந்துத வருகிறது.

இந்த வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தாமல் நிறுத்தினால் தான், இருநாட்டு மீனவர்களிடமும் சுமூக உறவு ஏற்படும். தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதை தமிழக அரசும், மீன்வளத்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x