Published : 21 Jun 2016 08:20 AM
Last Updated : 21 Jun 2016 08:20 AM

சென்னை சிஐடி நகரில் இரவில் ஆளில்லா விமானம் பறக்க விட்ட நடிகரின் மகன் கைது

சிஐடி நகரில் இரவில் ஆளில்லா விமானத்தை பறக்க விட்ட நடிகர் பாண்டியராஜனின் மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை சிஐடி காலனி பிசஸ் வேலஸ் அவென்யூவில் நேற்று முன்தினம் இரவில் சிறிய வகை ஆளில்லா விமானம் பறந்தது. அதில் கேமராக்களும் இருந்தன. அந்த விமானம் சிறிய அளவில் சத்தத்தையும் எழுப்பியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்த னர். போலீஸார் விரைந்து வந்து விமானம் பறப்பதை பார்த்து அதை யார் இயக்குகிறார்கள் என்று ஒரு வீட்டின் மாடியில் ஏறி நின்று பார்த்தனர்.

அப்போது ஒரு நபர் கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து விமானத்தை இயக்குவது தெரிந்தது. உடனே போலீஸார் அவரை பிடித்து விமானத்தை இறக்கி பறிமுதல் செய்தனர்.

அவரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்தப்பட்ட விசாரணையில், ஆளில்லாத குட்டி விமானத்தை பறக்க விட்டது பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேம ராஜன் என்பது தெரிந்தது.

சினிமா ஷூட்டிங்கில் இந்த விமானத்தை பயன்படுத்தி காட்சிகளை பதிவு செய்ய இருக்கிறேன். இதற்காக புதிதாக இந்த விமானத்தை வாங்கினேன். அதை பறக்க விட்டு சோதனை செய்வதற்காக தற்போது பறக்க விட்டதாக போலீஸிடம் பிரேம ராஜன் தெரிவித்தார்.

ஆனால் பிரேம் ராஜன் தி.நகரில் வசித்து வருகிறார். சிஐடி காலனியில் வந்து ஏன் பறக்க விட்டீர்கள் என்று போலீஸார் கேட்டதற்கு, 'தி.நகரில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இங்கு வந்து விமானத்தை பறக்க விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானங்கள் பறக்கவிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி விமானத்தை பறக்க விட்டதாக பிரேம ராஜனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x