Published : 10 Mar 2017 11:59 AM
Last Updated : 10 Mar 2017 11:59 AM

கூலித் தொழிலாளர்களை செம்மரக் கடத்தல் கும்பல்களாக சித்தரிப்பதா?- முத்தரசன் சந்தேகம்

கூலித் தொழிலாளர்களை செம்மரக் கடத்தல் கும்பல்களாக சித்தரிப்பது உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க விடும் தந்திரமோ என ஐயம் ஏற்படுவதாக முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக குற்றம் சாட்டி திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 159 தொழிலாளர்களை ஆந்திர மாநில அரசின் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உள்ளாடையுடன் படம்பிடித்து நாளிதழ்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வேலையின்மையால் வறுமையில் வாழ்ந்துவரும் தொழிலாளர்களை செம்மரம் கடத்தும் சட்டவிரோதக் கும்பல்கள் மரம் வெட்டும் வேலை என கூலி உழைப்புக்காக என ஏமாற்றி அழைத்து சென்று இந்த அவலநிலைக்கு ஆளாக்கிவிடுகின்றன. கடத்தல் கும்பல்களை கைது செய்யாமல் விட்டுவிட்டு கூலித் தொழிலாளர்களை கைது செய்வதும், அவர்களையே கடத்தல் கும்பல்களாக சித்தரிப்பதும் உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க விடும் தந்திரமோ என ஐயம்ஏற்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு, ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு தொழிலாளர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை வழங்கி, வேலை தேடி வெளிமாநிலம் செல்வதை தடுக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் செயல்படும் சட்டவிரோதக் கும்பல்களின் நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x