Published : 25 Aug 2016 02:00 PM
Last Updated : 25 Aug 2016 02:00 PM

காவிரி பிரச்சினையில் அவசரகால வழக்கு: சம்பா சாகுபடிக்கு உச்ச நீதிமன்றம் தண்ணீர் பெற்றுத்தருமா?

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவாயிகளின் போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள அவசரகால வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியில் தண்ணீர் விடக் கோரி கடந்த 19-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் முழு அடைப்பு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வணிகர்கள், விவசாயிகள் பங்கேற்கும் தமிழகம் தழுவிய முழு அடைப்புக்கும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் செப்டம்பர் 23-ம் தேதி 1,000 இடங்களில் மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போராட்டங்கள் தீவிரமடைந்துகொண்டே செல்லும் நிலையில், மற்றொரு புறத்தில் தமிழக அரசு சார்பில் அவசரகால வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. அதில், 50 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் தரமுடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும் மறுத்துவிட்ட நிலையில், சமீபத்தில், 15 ஆயிரம் கன அடி தண்ணீரை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடகம் திறந்துவிட்டிருப்பது, தமிழகத்தின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்த்துகிறது.

ஏற்கெனவே, காவிரி தொடர் பான அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 18-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துவிட்டதால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக் கடியை உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துச்சொல்ல இருந்த வாய்ப்பு பறிபோயிருந்த நிலையில், தற்போதைய அவசரகால வழக்கு விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

அதுபோல, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி நீர் இருப்பு குறைவாக உள்ள காலகட்டங்களில், இருக்கின்ற நீரை பகிர்ந்தளிக்கும் வழிகாட்டல் படி மத்திய அரசு கர்நாடக அணைகளுக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம் உரிய தீர்வை இந்த வழக்கு ஏற்படுத்தி தரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து, காவிரி உரிமை மீட்புக்குழுத் தலைவர் பெ.மணியரசன் கூறியபோது, “இருக்கின்ற தண்ணீரில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி என்றால், அதைவிட குறைவாக அணைகளில் தண்ணீர் இருந்தாலும், அதன் சதவீதத்தைக் கணக்கிட்டு தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தரவேண்டும் என்ற தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவந்து, தமிழகத்துக்கு சம்பா சாகுபடிக்கு உச்ச நீதிமன்றம் தண்ணீர் பெற்றுத்தரும் என்று நம்புகிறோம். ஏற்கெனவே, காவிரி வழக்குகளில் அலட்சியமாக இருந்ததைப் போன்று இல்லாமல் வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியபோது, “வழக்கு காலங்கடந்து தொடரப்பட்டாலும் தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கரில் நடைபெற உள்ள சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத் தருவதற்கும். காவிரி டெல்டாவில் அனைத்து நீர்நிலைகளும் வற்றிப்போய் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளதற்கும் தீர்வு காண தேவையான உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x