Published : 02 Feb 2014 07:06 PM
Last Updated : 02 Feb 2014 07:06 PM

இலங்கை கடற்படை தாக்குதல்; 19 தமிழக மீனவர்கள் கைது

கச்சத்தீவு மற்றும் கோடியக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, தமிழக மீனவர்கள் 19 பேரை சிறைப்பிடித்துச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டிணம் ஜெகதாப்பட்டிணம் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து சனிக்கிழமை 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5,000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

சனிக்கிழமை நள்ளிரவில் கச்சத்தீவு அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரக கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்து ராமேஸ்வரம் மீனவர்களிடம், இது இலங்கை கடற்பகுதி இங்கு மீன்பிடிக்கக்கூடாது எச்சரிக்கை விடுத்ததோடு, 50 விசைப்படகுகளில் மீனவர்களின் வலைகளை அறுத்து கடலுக்குள் வீசினர். மேலும், கற்கள் மற்றும் சோடா பாட்டில்களைக் கொண்டு மீனவர்களை தாக்கியதகவும் கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரில் தாக்குதலினால் மீனவர்கள் உயிருக்கு பயந்து ராமேஸ்வரம் மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். மேலும், சிலர் வழக்கத்திற்கு மாறான இடங்களில் வலை விரித்து போதிய மீன்பாடு இல்லாமல் வெறும் கையுடன் கரை திரும்பினர்.

19 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 8 பேரையும் இரண்டுப் படகையும், கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப் பட்டிணம், ஜெகதாப்பட்டிணத்தச் சார்ந்த 3 படகுகளை கைப்பற்றி 11 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அவர்களை பிப்ரவரி 14 வரை காவலில் யாழ்ப்பாணம் சிறையிலடைக்க ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினருக்கு கண்டனம்

ராமேஸ்வரம் மீனவர் தலைவர் தேவதாஸ் நமது செய்தியாளரிடம் கூறும்போது, கடந்த ஜனவரி 27 அன்று இலங்கை - தமிழக இருநாட்டு மீனவர்கள் பிரதிநிதிகூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த மீனவப் பிரதிநிதிகளின் கூட்டம் முடிவடைந்து ஒரு வார காலம் கூட ஆகவில்லை. அதற்குள் இலங்கை கடற்படை இரண்டு முறை ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மீனவர்களை சிறைப்பிடித்திருக்கிறது. அதுபோலவே இந்திய கடற்படை இலங்கை மீனவர்கள் 9 பேரையும் சிறைப்பிடித்திருக்கிறார்கள்.

இரு நாட்டு கடற்படையினரும் மீனவர்களை சிறைப்பிடித்த சம்பவங்கள் இரு நாட்டு நல்லெண்ண சூழ்நிலையும் சீர்குலைத்ததோடு மட்டுமின்றி நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தை வெறும் நாடகமோ என்ற அச்சத்தை தருவதாக உள்ளதாவும் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x