

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ள நிலையில், வட தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும். அதே நேரம் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், “தமிழகத்துக்கு அருகில் உள்ள கடல் பகுதி தற்போது அமைதி யாக இருப்பதால், தமிழகத்தில் மழை குறையும். அடுத்த இரண்டு நாட்களில் வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். எனினும் வடகிழக்கு பருவமழைக் காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால், மழை மீண்டும் தொடரும் வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
தமிழகத்தில் நேற்று பதிவான மழை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் 6 செ.மீ., பாப நாசத்தில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, மதுரை விமான நிலையத்தில் தலா 4 செ.மீ., திருநெல் வேலி மாவட்டம் நாங்குநேரி, சங்கரன் கோவில், தென்காசி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.