

ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் மறுகரையில் வசிக்கும் தமிழர்களுக்கு கர்நாடக வனத்துறை பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் மறுகரையில் கர்நாடக மாநில எல்லையில் மாறுகொட்டாய், தேங்காகோம்பு, பூங்கோம்பு, ஆத்தூர், கோட்டையூர், ஆலம்பாடி, அப்புகாம்பட்டி, ஜம்புருட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2000-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல் ஆகியவைதான் இவர்களின் தொழில்.
இந்நிலையில் இங்குள்ள சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் கர்நாடக வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இப்பகுதியில் காவிரி வனவிலங்குகள் சரணாலயம் அமைப்பது குறித்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு கடந்த 4 மாதங்கள் முன்பு வரை அந்த திட்டம் பற்றி பேச்சே இல்லை. தற்போது சரணாலயம் தொடர்பான எச்சரிக்கை பலகை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இங்குள்ள பெரும்பாலான தமிழர்களை வெளியேற்றும் நெருக்கடி வலுத்து வருகிறது.
இதுபற்றி, ‘வன எல்லையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சங்கம்’ (கர்நாடகா தமிழ்ச் சங்கத்துடன் இணைவு பெற்றது) என்ற அமைப்பின் துணைத் தலைவரான பழனிசாமி கூறியதாவது:
மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்தே அங்கு வசிக்கிறோம். மூன்று தலைமுறையைக் கடந்து இங்கு வாழ்ந்து வருகிறோம். மேலும், மேட்டூர் அணை அமைக்கும்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்தினர். அப்போதும் சில குடும்பங்கள் எங்கள் பகுதியில் வந்து அமர்ந்தனர். இந்நிலையில் இங்கு வசிப்பவர்களில் சிலருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. மின் இணைப்பும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், சுகாதார வசதியும் இல்லை. எங்கள் பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் தினமும் பரிசலில் ஆற்றைக் கடந்து ஒகேனக்கல்லுக்குச் சென்றுதான் படிக்கும் நிலை உள்ளது. எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல், இருக்கும் இடத்திலிருந்தே வெளியேறுமாறு வனத்துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களால் வனத்துக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இதே பகுதியில் அடிப்படை வசதிகளுடன் நாங்கள் தொடர்ந்து வசிக்க விரும்புகிறோம்.
தமிழக அரசு, அரசியல் கட்சியினர் என யாரும் எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. தமிழக அரசு தலையிட்டு இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.