

திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் ஆகியோர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரை, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் பல்வேறு வகையில், நடத்தை விதிகள் மீறப்படுகின்றன. அரசு அதிகாரிகளும் போலீசாரும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் நிலையங்களில் முகாமிட்டு, திமுகவினருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடுகின்றனர்.
வாக்காளர்களுக்கு போலீஸ் வாகனங்கள் மூலம், ஓட்டுக்கு பணம் வழங்க ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். எனவே, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எப்,) மூலம் போலீஸ் வாகனங்களைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். ஏற்காடு தொகுதி இடைத்தேர்த லில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் நேர்மையான, வெளிப்படையான தேர்தலை அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.