Published : 26 Aug 2016 08:55 AM
Last Updated : 26 Aug 2016 08:55 AM
மனிதக்கழிவுகளை அள்ளும்போது விஷவாயு தாக்கி இறந்த 41 துப்புரவு தொழி லாளர்களின் குடும்பத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மனிதக்கழிவுகளை அள்ளும்போது உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்கக்கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் நிறுவனர் பாடம் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘ பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தால், அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2014-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு கடந்த மே மாதம் தள்ளுபடியாகியுள்ளது.
இழப்பீடு விஷயத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது. இப்பிரச்சினையில் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் நாங்களே உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி அளித் துள்ள அறிக்கையின்படி, இறந்துபோன 41 துப்புரவுப் பணியாளர்களின் குடும்பங் களைக் கண்டறிய முடியவில்லை என்று அரசு கூறியுள்ளது. இக்குடும்பங்களைக் கண்டுபிடிப்பது, மாநில அரசின் கடமை. உள்ளாட்சி தேர்தலைக் காரணம் காட்டி, தமிழகம் முழுவதும் உள்ள துப்புரவு பணியாளர்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு காலம் தாழ்த்தக்கூடாது’’ என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT