Published : 23 Apr 2017 09:06 AM
Last Updated : 23 Apr 2017 09:06 AM
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாவிட்டால், தமிழகத்தில் போராட்டங்கள் ஓயாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
விவசாயிகள் பிரச்சினைக்காக திமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து வரும் 25-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இந்தப் போராட் டத்தின் நோக்கத்தை விளக்கு வதற்காக சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற் றனர். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஊழல் குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, மத்திய பாஜக அரசிடம் தமிழகத்தை அடகு வைத்துவிட்டனர். விவசாயிகளின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்துவோம். பிரச்சினைகள் தீரும் வரை எங்களின் போராட்டங்கள் ஓயாது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அஸ்திவாரம்தான் இந்த பொதுக் கூட்டம். 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும். அதிமுகவை உடைத்ததும் பாஜகதான். இப் போது இணைப்பதும் பாஜகதான். ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய சுகாதார அமைச்சரையும் பிரதமரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:
இந்தித் திணிப்பை திமுக உறுதியாக எதிர்க்கிறது. எனவே, திமுகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அதிமுக, திமுகவை அழிப்பதன் மூலம் திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக சதி செய்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
தமிழகத்தில் நடப்பது பாஜகவின் பினாமி அரசு. அதிமுக என்ற பெயரில் தமிழகத்தை பாஜக ஆட்சி செய்கிறது. திமுக கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற் றதை கூட்டணிக்கு அச்சாரம் என்கிறார்கள். மோடி செய்வது அரசியல் என்றால் நாங்கள் செய்வதும் அரசியல்தான்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந் தரராஜன்:
அதிமுகவை பிளவு படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக. எதையும் மதிக்காத கூட்டம் மத்தியில் ஆள்கிறது. மத்திய பாஜக அரசை எதிர்த்து கடுமை யான போராட்டங்களை நடத்த வேண்டும். வெற்றி பெறும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு தலைவர்கள் பேசினர்.
கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபூபக்கர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT